விமான விபத்து குறித்த யூகங்களை நம்ப வேண்டாம்: டாடா நிறுவன தலைவர் வேண்டுகோள்

19


புதுடில்லி: '' ஏர் இந்தியாவை கையகப்படுத்தியபோது, பயணிகள் பாதுகாப்புக்கு முன்னுரிமை என முடிவு செய்தோம். அதில் எந்த சமரசமும் கிடையாது. விபத்து குறித்த யூகங்களை நம்ப வேண்டாம்,'' என டாடா நிறுவனம் தெரிவித்து உள்ளது.


ஆமதாபாத் விமான விபத்து தொடர்பாக ஏர் இந்தியாவை கையகப்படுத்தி உள்ள டாடா நிறுவனத்தின் தலைவர் சந்திரசேகரன், நிறுவன ஊழியர்களுக்கு எழுதிய கடிதத்தில் கூறியுள்ளதாவது: நேற்று நடந்த சம்பவம் விவரிக்க முடியாதது. நாங்கள் அதிர்ச்சியிலும் வேதனையிலும் இருக்கிறோம். ஒரு நபரை இழப்பதும் பெரும் துயரம். ஆனால், ஒரே நேரத்தில் பல உயிரிழப்புகள் ஏற்பட்டதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.


டாடா நிறுவன வரலாற்றில், கறுப்பு நாட்களில் இதுவும் ஒன்று. தற்போது ஆறுதல் சொல்வதற்கு எந்த வார்த்தையும் இல்லை. விமான விபத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் உறவினர்களின் நினைவாக எனது எண்ணம் உள்ளது. நாங்கள் அவர்களுக்காக இங்கு இருக்கிறோம்.

விபத்து குறித்து விசாரணை நடத்த, கடந்த 24 மணி நேரத்தில் இந்தியா, பிரிட்டன் மற்றும் அமெரிக்காவில் இருந்து ஆமதாபாத்திற்கு புலனாய்வு குழுவினர் வந்துள்ளனர். அவர்களுக்கு எங்களது முழு ஒத்துழைப்பும் இருக்கும். விபத்துக்கான காரணத்தை கண்டறியும் முயற்சிகளில் வெளிப்படையாக இருப்போம். உயிரிழந்தவர்களின் குடும்பங்கள், நெருக்கமானவர்கள், விமானிகள் மற்றும் ஊழியர்களுக்கு நாங்கள் கடமைப்பட்டு உள்ளோம்.

சமூகத்திற்கான பொறுப்பை டாடாநிறுவனம் தீவிரமாக எடுத்துக் கொள்கிறது. அதில் நேற்று நடந்த சம்பவத்தில் வெளிப்படைத்தன்மையாக இருப்பதும் அடங்கும்.

தற்போது நடந்த விபத்துக்கு காரணம் தேடுவது மனித உள் உணர்வின் இயல்பு. நம்மைச் சுற்றி நிறைய யூகங்கள் உள்ளன. அதில் சில சரியாக இருக்கலாம். சில தவறாக இருக்கலாம். பொறுமையாக இருக்க வேண்டும் என அனைவரிடமும் வேண்டுகிறேன்.

நேற்று மிகப்பெரிய உயிரிழப்பை நாம் கண்டோம். வழக்கமாக செல்லும் விமானம் பேரழிவில் சிக்கியது என்பது குறித்து திறன் வாய்ந்த புலனாய்வு அதிகாரிகள் விசாரணைக்கு பிறகு, புரிந்து கொள்ள உதவும். உறுதி செய்யப்பட்ட தகவல் கிடைத்ததும், துயர சம்பவம் எப்படி நடந்தது என்பது குறித்து வெளிப்படையாக அறிவிப்போம்.பலரால் நம்பப்படும் டாடா நிறுவனம், ஏர் இந்தியாவை கையகப்படுத்திய உடன் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதே எங்களின் முன்னுரிமையாக இருந்தது. அதில் எந்த சமரசமும் இல்லை.

இது ஒரு கடினமான தருணம். எங்கள் பொறுப்புகளில் இருந்து நாங்கள் பின்வாங்க மாட்டோம். இந்த இழப்பை நாங்கள் சுமப்போம். இதனை மறக்க மாட்டோம். இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

Advertisement