ஏரி கரையை உடைத்து தனியாருக்கு பாலம் அமைப்பதை தடுக்க மனு

திருப்போரூர்,:திருப்போரூர் வட்டம், கோவளம் கிராமத்தில், மனுநீதி நாள் முகாம் நேற்று நடந்தது.

செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் தலைமை தாங்கினார்.

முகாமில் விவசாயிகள், மகளிர் என, 60 பயனாளிகளுக்கு இலவச பட்டா, தையல் இயந்திரம் உள்ளிட்ட, 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

முகாமில் அங்கன்வாடி மையம், வேளாண்மை, தோட்டக்கலை, கூட்டுறவு, மருத்துவம், கல்வி உள்ளிட்ட துறைகள் சார்ந்த அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.

இதில், அப்பகுதி ஒன்றிய கவுன்சிலர் யாஸ்மின்,'கோணத்தாங்கல் ஏரியின் கரையை உடைத்து, தனியார் பயன்பாட்டிற்கு பாலம் அமைக்கும் பணியை தடுத்து நிறுத்த வேண்டும் என, கோரிக்கை மனு ஒன்றை கலெக்டரிடம் அளித்தார்.

அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

கோவளம் ஊராட்சியில் அடங்கிய புல எண் 68ல் உள்ள கோணத்தாங்கல் ஏரியின் குறுக்கே, தனியார் நிறுவனம் சார்பில் பாலம் அமைக்கும் பணி நடக்கிறது.

இந்நிறுவனம் பாலம் கட்டுமான பணிக்காக, ஏரியில் இருபுறமும் உள்ள கரைகளை உடைத்துள்ளதால், தற்போது பெய்து வரும் மழைக்கு, ஏரிக்கு வரும் தண்ணீர் ஊருக்குள் புகும் அபாயம் உள்ளது.

நீர் நிலைகளில் தனியார் பயன்பாட்டிற்காக சாலை அமைக்கவோ, பாலம் அமைக்கவோ உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், எதன் அடிப்படையில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் அமைக்கும் பாலத்தின் பணியை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.

அதேபோல், கோவளம் ஊராட்சிக்கு உட்பட்ட புல எண் 55ல், கடற்கரையை ஒட்டிய 200 மீட்டர் உட்பட்ட பகுதிகளில் கடற்கரை மேலாண்மை விதிகளுக்கு புறம்பாக, பல்வேறு கேளிக்கை விடுதிகள் செயல்படுகின்றன.

விதிகளுக்கு புறம்பாக கட்டப்பட்டு செயல்படும் இக்கேளிக்கை விடுதிகள் குறித்து தங்கள் கவனத்திற்கு வரவில்லை எனில், விதிகளுக்கு புறம்பாக செயல்படும் கேளிக்கை விடுதிகளையும் கட்டடங்களையும் அப்புறப்படுத்த வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் அருண்ராஜ், விசாரிப்பதாக தெரிவித்து உள்ளார்.

Advertisement