செங்கையில் மகளை கர்ப்பமாக்கிய கொடூர தந்தைக்கு ஆயுள் தண்டனை

செங்கல்பட்டு:செங்கல்பட்டில், மகளை பலாத்காரம் செய்த தந்தைக்கு ஆயுள் தண்டனை விதித்து, செங்கல்பட்டு 'போக்சோ' நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

செங்கல்பட்டு அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த, 15 வயது சிறுமி, பெற்றோருடன் வசித்து வருகிறார். இவரது தந்தை விஜயகுமார், 50; கொத்தனார்.

தன் இரண்டாவது மனைவியின் மகளான சிறுமி ஐந்தாம் வகுப்பு படிக்கும் போதிலிருந்தே, மகள் என்றும் பாராமல், விஜயகுமார் பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

கடந்தாண்டு, 10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றதால், சிறுமி வீட்டிலேயே இருந்துள்ளார்.

அப்போது, சிறுமியை கட்டாயப்படுத்தி பலமுறை, விஜயகுமார் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதை யாரிடமும் கூறக்கூடாது என மிரட்டியுள்ளார்.

இதுகுறித்து சிறுமி தன் தாயிடம் கூறியுள்ளார். இதை தட்டிக் கேட்ட போது, சிறுமியின் தாயக்கு விஜயகுமார் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இந்நிலையில், சிறுமி எட்டு மாதம் கர்ப்பமாக இருப்பது தெரிந்ததால், செங்கல்பட்டு அனைத்து மகளிர் காவல் நிலையில், தாய் புகார் அளித்தார்.

இதன்படி, போலீசார் போக்சோ வழக்குப்பதிவு செய்து, விஜயகுமாரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

வழக்கு விசாரணையின் போது, கடந்தாண்டு செப்., 6ம் தேதி, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில், சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்தது.

ஆண் குழந்தைக்கு விஜயகுமார் தந்தை என்பது, மரபணு பரிசோதனை வாயிலாக தெரிந்துள்ளது.

இவ்வழக்கு, செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில், நீதிபதி நசீமா பானு முன்னிலையில் நடைபெற்று வந்தது.

அரசு தரப்பில், வழக்கறிஞர் லட்சுமி ஆஜரானார்.

வழக்கில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால், விஜயகுமாருக்கு ஆயுள் தண்டனையும், 3,000 ரூபாய் அபராதமும் விதித்து, நீதிபதி நசீமா பானு தீர்ப்பளித்தார்.

மேலும், இவ்வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடாக 10 லட்சம் ரூபாய் வழங்க, தமிழக அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

Advertisement