மனைவி அஸ்தியை கரைக்க வந்தவர் பலியான சோகம்

ஆமதாபாத் : குஜராத்தின் அம்ரேலி மாவட்டத்தைச் சேர்ந்த அர்ஜுன் மனுபாய் படோலியா, 36, என்பவர், பிரிட்டனின் லண்டனில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவரது மனைவி பாரதிபென், சமீபத்தில் லண்டனில் உயிரிழந்தார்.
இவரது அஸ்தியை நர்மதா நதியில் கரைக்க, அம்ரேலி மாவட்டத்தில் உள்ள மூதாதையர் கிராமமான வாடியாவுக்கு அர்ஜுன் மனுபாய் படோலியா வந்தார்.
மனைவியின் இறுதி ஆசைப்படி, அஸ்தியை நர்மதா நதியில் கரைத்த அர்ஜுன் மனுபாய் படோலியா, லண்டனுக்கு செல்ல நேற்று முன்தினம் ஆமதாபாத் விமான நிலையத்தில், 'ஏர் - இந்தியா' விமானத்தில் பயணம் செய்தார். விமானம் விபத்துக்குள்ளானதில், அவர் உயிரிழந்தார். அவருக்கு 4 மற்றும் 8 வயதில் இரண்டு மகள்கள் உள்ளனர்.
'ஏர் - இந்தியா' விமானம் விழுந்து நொறுங்கிய பி.ஜே.மருத்துவக் கல்லுாரி விடுதி கேன்டீனில் மதிய உணவு சாப்பிட்ட ஐந்து மாணவர்கள் உயிரிழந்தனர். விபத்தின் போது விடுதியில் உள்ள கேன்டீனில் இருந்த தாய், மகளை காணவில்லை என, அங்கு பணிபுரியும் ரவி தாக்குர் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், ''கேன்டீனில் நானும், என் மனைவியும், அம்மாவும் வேலை செய்கிறோம். விபத்து நடந்த போது, அம்மாவுடன் என் மகளும் இருந்தார். அவர்களின் நிலை என்னவானது என இதுவரை தெரியவில்லை. அதிகாரிகளும் சரியாக பதிலளிக்கவில்லை,'' என்றார்.
மேலும்
-
துபாய் 67 அடுக்குமாடி கட்டிடத்தில் பெரும் தீ விபத்து: 3,820 குடியிருப்பாளர்களும் பத்திரமாக மீட்பு
-
லண்டனில் வரலாறு படைத்தது தென் ஆப்ரிக்கா: உலக டெஸ்ட் சாம்பியன் பட்டம் வென்று சாதனை
-
தென் ஆப்ரிக்க அணி வரலாறு: டெஸ்ட் உலக கோப்பை வென்றது
-
ஏவுகணை தாக்குதல் தொடர்ந்தால் ஈரான் தலைநகர் பற்றி எரியும்; இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் எச்சரிக்கை!
-
அதிகமாக படியளப்பது மாநில அரசு: முதல்வர் ஸ்டாலின்
-
விமான விபத்தின் போது நடந்தது என்ன: கறுப்பு பெட்டி ஆய்வுக்கு பிறகு தெரியும் என மத்திய அமைச்சர் பேட்டி