முதல்வர், துணை முதல்வர் தொகுதிக்கு மட்டும் முக்கியத்துவம்...போர்க்கொடி:தேர்தல் நெருங்குவதால் ஆளும்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் கொதிப்பு

சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில், சென்னையில் முதல்வர் ஸ்டாலினின் கொளத்துார், துணை முதல்வர் உதயநிதியின் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதிகளில் மட்டும் வளர்ச்சி பணிகளுக்கு மாநகராட்சி அதிக முக்கியத்துவம் அளித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மற்ற தொகுதிகளில் அடிப்படை கட்டமைப்பு பணிகளுக்குக்கூட, அதிகாரிகளிடம் கெஞ்ச வேண்டியிருப்பதாக, ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,க்களும், கவுன்சிலர்களும் கொதிப்படைந்துள்ளனர்.

சென்னை மாநகராட்சி எல்லைக்குள், 22 சட்டசபை தொகுதிகள் உள்ளன. கவுன்சிலர்கள், எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.,க்கள் என பெரும்பாலோனார் தி.மு.க.,வைச் சேர்ந்தவர்களாகவே உள்ளனர்.

ஆனால், தங்கள் தொகுதி மேம்பாட்டு நிதியின்கீழ் வளர்ச்சி திட்ட பணிகளை செய்ய, மற்ற அடிப்படை கட்டமைப்புகளுக்கு, அதிகாரிகளிடம் நடையாய் நடந்து கோரிக்கையை நிறைவேற்ற வேண்டியிருப்பதாக, எம்.எல்.ஏ.,க்கள் குற்றச்சாட்டுகின்றனர்.

குறிப்பாக, திருவொற்றியூர் - மணலி மண்டலங்கள் இடையே, சி.பி.சி.எல்., நிறுவனம் சந்திப்பில் சாத்தாங்காடு ஏரி உள்ளது. இதை பறவைகள் சரணலாயமாக மாற்ற, திருவொற்றியூர் மண்டலத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, 36 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்க திட்டமிடப்பட்டு, மாநகராட்சியிடம் நிதிக்கான அனுமதி கோரப்பட்டது.

ஆனால், கொளத்துார் தொகுதியில் புதிய பூங்காக்கள், பொழுதுபோக்கு ஆகியவை மேற்கொள்ள வேண்டியிருப்பதால், சாத்தாங்காடு ஏரிக்கு ஒதுக்கப்பட்ட, 36 கோடி ரூபாயை கொளத்துார் தொகுதிக்கு மாநகராட்சி அதிகாரிகள் மாற்றினர்.

சாத்தாங்காடு ஏரியில் பறவைகள் சரணாலயம் அமைக்கப்பட்டு இருந்தால், திருவொற்றியூர், மணலி, மாதவரம், தண்டையார்பேட்டை, ராயபுரம் ஆகிய மண்டலங்களை சேர்ந்த மக்களுக்கு பிரதான பொழுதுபோக்கு இடமாக இருந்து இருக்கும்.

அப்பகுதி மக்கள் பெரும்பாலும், தெற்கு மற்றும் மத்திய வட்டார பகுதிகளை நோக்கியே இதுபோன்ற பொழுதுபோக்கு இடங்களுக்கு செல்ல வேண்டிய நிலை நீடித்து இருக்காது.

இதுபோன்று பல்வேறு மண்டலங்களில், மேற்கொள்ள திட்டமிடப்பட்ட பணிகள், குறிப்பிட்ட தொகுதிகளுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்கப்படுவதால், ஆளுங்கட்சியைச் சேர்ந்த மற்ற எம்.எல்.ஏ.,க்கள், கவுன்சிலர்கள் அதிருப்தியில் உள்ளனர். பல இடங்களில் நேரடியாக, அதிகாரிகளிடம் கேள்வி எழுப்புகின்றனர்.

இதுகுறித்து, எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் கவுன்சிலர்கள் கூறியதாவது:

சென்னை மாநகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை, நெடுஞ்சாலை, பொதுப்பணித்துறை, மருத்துவ துறை உள்ளிட்ட பல துறைகளால், குறிப்பிட்ட தொகுதிகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

முதல்வர் ஸ்டாலின் தொகுதியான கொளத்துார், துணை முதல்வர் உதயநிதி தொகுதியான சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி, அமைச்சர் சேகர்பாபு தொகுதியான துறைமுகம், அமைச்சர் சுப்பிரமணியன் தொகுதியான சைதாப்பேட்டை ஆகிய தொகுதிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

அதேபோல், மேயர் வசிக்கும் திரு.வி.க., நகர் தொகுதியின் உட்கட்டமைப்புகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. சட்டசபை தேர்தலில் இந்த தொகுதியில்தான் மேயர் பிரியா போட்டியிட போவதாக கூறப்படுகிறது.

இந்த ஐந்து தொகுதிகளில், பள்ளி கட்டட சீரமைப்பு, கழிப்பறை, சாலை சீரமைப்பு, குடிநீர் வசதி உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்த நிதி கேட்டால் உடனே நிறைவேற்றப்படும். மற்ற தொகுதிகளுக்கு, மாநகராட்சி அதிகாரிகளிடம் நடையாய் நடந்து, கெஞ்சினால் மட்டுமே பணிகள் நடக்கின்றன.

சில நேரங்களில், நாங்கள் கோரிய திட்டங்களை எங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், நல்ல திட்டங்களாக இருந்தால், அந்த ஐந்து தொகுதிகளில் மட்டுமே முதலில் செயல்படுத்தப்படும்.

ஆளுங்கட்சியைச் சேர்ந்தோராக இருப்பதால், தங்கள் தொகுதிக்கு வர வேண்டிய பல்வேறு திட்டங்களை, குறிப்பிட்ட சில தொகுதிகளுக்கு சென்றதை வெளிப்படையாக பேச முடியவில்லை.

தேர்தல் நெருங்கி வருவதால், மற்ற தொகுதிகளுக்கும் அரசு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் செயல்பட வேண்டும். ஐந்து தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றால் போதும் என நினைத்தால் ஆளுங்கட்சியாக இருக்க முடியாது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


கொளத்துாருக்கு மட்டும்


மாதம்தோறும் ஆய்வுசென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில், அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியா ஆகியோர் தலைமையில், முதல்வர் தொகுதியான கொளத்துார் சட்டசபை தொகுதிக்கான வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து கலந்தாய்வு கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. மாதந்தோறும், கொளத்துார் தொகுதிக்கு மட்டும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, மாநகராட்சி உயர் அதிகாரிகள் அடங்கிய ஆய்வு கூட்டம் நடத்தப்படுகிறது. மற்ற தொகுதிகளில் இதுபோன்ற கூட்டங்கள் நடத்தப்படுவதில்லை என, கவுன்சிலர்கள் புலம்புகின்றனர்.

Advertisement