ரூ.59.15 கோடியில் நான்கு வழிச்சாலை பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு

நாமக்கல்: முதல்வரின் சாலை விரிவாக்க திட்டத்தின் கீழ், ஓமலுார் - சங்ககிரி - திருச்செங்கோடு -பரமத்தி சாலையில், திருச்செங்கோடு வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் முதல் சித்தாளந்துார் வரை, 9.15 கி.மீ., துாரத்திற்கு, நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தும் பணிக்கு, 59.15 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நான்கு மாதங்களுக்கு முன், தமிழக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் வேலு, பணியை அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். இதையடுத்து, நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. இதற்கிடையே, 9 கி.மீ., துாரத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல், சிறு பாலங்கள் அகலப்படுத்துதல், சாலை அகலப்படுத்தும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், சேலம் தரக்கட்டுப்பாடு பொறியாளர் குமரேசன், சாலை அகலப்படுத்தும் பணியை ஆய்வு செய்தார். அப்போது, ஈரப்பதம் கொண்ட ஜல்லி கலவை சரியான அளவில் உள்ளதா, தார் கலவை சரியான அளவில் சேர்க்கப்பட்டுள்ளதா, அதன் தரம், தடிமன் குறித்து ஆய்வு செய்தார்.
மேலும், 'சாலை மேம்பாட்டு பணியில், சாலை வளைவு பகுதிகளில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். சிறப்பான சாலை பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பணிகளை குறித்த காலத்திற்கு முடிக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, உத்தரவிட்டார்.
தரக்கட்டுப்பாட்டு உதவி கோட்டபொறியாளர் தமிழரசி, உதவி கோட்ட பொறியாளர்கள் நடராஜன், மணிகண்டன் உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement