பள்ளிப்பாளையம் புதிய மேம்பாலத்தில் உறுதித்தன்மை குறித்து அதிகாரிகள் ஆய்வு

பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் பகுதியில் புதிதாக திறக்கப்பட்ட மேம்பாலத்தின் தரம், உறுதித்தன்மை குறித்த அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

சென்னை கன்னியாகுமரி தொழிற்தட திட்டத்தில், 424.38 கோடி ரூபாய் மதிப்பில் மல்லியக்கரை, ராசிபுரம், திருச்செங்கோடு, -ஈரோடு சாலை, பள்ளிப்பாளையம் பகுதியில் ஆலாம்பாளையத்தில் இருந்து ஒன்பதாம்படி வரை, 3 கி.மீ., துாரத்திற்கு உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்பட்டது. கடந்த மாதம், 29ல் சாலை மற்றும் மேம்பாலம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

ஆனால், புதிதாக திறக்கப்பட்ட மேம்பாலத்தின் சில இடங்களில் விரிசல் ஏற்பட்டு, கான்கிரீட்கள் பெயர்ந்து காணப்பட்டது. மேலும், மேம்பாலத்திற்கு முழுமையாக பெயின்ட் அடிக்காமல் காணப்பட்டது. இதனால், அவசர கதியில் மேம்பாலம் திறக்கப்பட்டதாக, பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர். இதையடுத்து, மேம்பாலம் திறந்த அன்றே, கலெக்டர் உமா மேம்பாலத்தை ஆய்வு செய்தார். அப்போது, 'மேம்பாலம் முற்றிலும் பாதுகாப்பானது; வாகன ஓட்டிகள் பயப்பட தேவையில்லை; முழுமையாக இந்த பாலத்தை மக்கள் பயன்படுத்தலாம்' என, தெரிவித்தார்.
இந்நிலையில், நேற்று புதிதாக திறக்கப்பட்ட மேம்பாலத்தின் தரம், உறுதித்தன்மை குறித்து, நெடுஞ்சாலைதுறை உயர் அதிகாரிகள் மற்றும் தொழில் நுட்ப குழுவினர் ஆய்வு செய்து மாதிரிகளை எடுத்து பரிசோதனை செய்தனர்.

Advertisement