மாற்று பணிக்கு செல்லும் விசைத்தறி தொழிலாளர்கள்

பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் சுற்று வட்டாரத்தில், 25,000க்கும் மேற்பட்ட விசைத்தறி கூடங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த விசைத்தறி கூடத்தில் ஏராளமான தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். பள்ளிப்பாளையம் பகுதியில் செயல்படும் விசைத்தறியில் வேட்டி, சேலை, லுங்கி, சட்டை, துண்டு உள்ளிட்ட பல வகையான துணிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

இங்கு உற்பத்தி செய்யப்படும் துணிகள் இந்தியா முழுவதும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இதில், பெரும்பாலான விசைத்தறி கூடத்தில், லுங்கி அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. கடந்த, இரண்டு மாதமாக லுங்கி விற்பனை தொய்வு நிலையில் காணப்பட்டது. கடந்த ஓரிரு வாரங்களாக நாளுக்குநாள் லுங்கி விற்பனை சரிவை நோக்கி செல்கிறது. இதனால் உற்பத்தி செய்யப்பட்ட துணிகள் பெருமளவில் விற்பனையாகாமல் தேக்கமடைந்து உள்ளது.
இதனால், பல விசைத்தறி கூடங்கள் தொடர்ந்து உற்பத்தி செய்யாமல் நிறுத்தி விடுமுறை அளித்துள்ளனர். இன்னும் சில விசைத்தறி கூடங்கள், வாரத்தில் மூன்று நாட்கள் தான் செயல்படுகிறது. இதனால் விசைத்தறி தொழிலில் ஈடுபட்டு வந்த தொழிலாளர்கள் பலர், மாற்று வேலைக்கு செல்ல துவங்கியுள்ளனர்.

Advertisement