மத்திய அரசு திட்டங்களுக்கு தி.மு.க., அரசு ஸ்டிக்கர் ஒட்டுவதாக பா.ஜ., குற்றச்சாட்டு

ராசிபுரம்: ராசிபுரத்தில், இரண்டு தினங்களுக்கு முன் நடந்த அரசு நிகழ்ச்சியில் அமைச்சர் மதிவேந்தன், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கி கடன் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். மாவட்டம் முழுவதும், 1,104 குழுக்களுக்கு, 77.57 கோடி ரூபாய் மதிப்பில் வங்கி கடன் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கடன் உதவி முழுவதும், தி.மு.க., அரசு வழங்குவது போல் அமைச்சர் பேசினார்.

இந்நிலையில், பா.ஜ.,வின் மத்திய நலத்திட்டங்கள் பிரிவின் மாநில துணைத்தலைவர் லோகேந்திரன் வெளியிட்ட அறிக்கை: மத்திய அரசு தான் மகளிர் குழுக்களுக்கு வங்கி மூலம் கடன் உதவி வழங்கும் திட்டத்தை தொடங்கியுள்ளது. என்.ஆர்.எல்.எம்., என்ற திட்டம் மூலம் வங்கி கடன் வட்டிக்கு, 3 சதவீதம் தள்ளுபடி மற்றும் சரியான காலத்தில் கடனை கட்டும் குழுக்களுக்கு, 2 சதவீதம் கூடுதல் தள்ளுபடி வழங்குகிறது. அதேபோல், ஒரு குழுவுக்கு அதிகபட்சமாக, 20 லட்சம் ரூபாய் என கடன் தொகையை உயர்த்தியுள்ளது. அதிகபட்சமாக ஒரு மகளிர் குழுவுக்கு, மூன்று லட்சம் ரூபாய் வரை வட்டி மானியம் கிடைக்கும். வங்கியில் கடனுதவி வழங்கப்படுவது முற்றிலும் மத்திய அரசுடையது. கூட்டுறவு வங்கி மூலம் கடனுதவி வழங்குவது மட்டும்தான் மாநில அரசுடையது. ஆனால், இந்த திட்டம் முழுவதும் மாநில அரசுடையது போல் விழாவை நடத்துகின்றனர். முக்கியமாக ராசிபுரத்தில் நடந்த விழாவை, தி.மு.க., கட்சி நடத்துவது போல் நடத்தியுள்ளனர். இந்த திட்டம் குறித்து மாநில அரசு முழு விளக்கம் தர வேண்டும்.
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Advertisement