300 ஆண்டுகள் பாரம்பரிய ஆற்காடு மக்கன் பேடா

ராணிப்பேட்டை மாவட்டத்திற்குள் வரும் ஆற்காடின் அடையாளமாக 'மக்கன் பேடா' ஸ்வீட்டை சொல்லலாம். அங்கு ஆட்சி செய்த நவாப்களின் காலத்தில், இந்த இனிப்பு கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 300 ஆண்டு பாரம்பரிய இந்த மக்கன் பேடா, பார்க்க, குலாப் ஜாமுன் போன்று தெரிந்தாலும், மக்கன் பேடா சுவையில் தனித்துள்ளது.


மைதா மாவு, வெண்ணெய், கெட்டி தயிர் வைத்து, சர்க்கரை பாகு கொண்டு ஆற்காடு மக்கன் பேடா தயாரிக்கப்படுகிறது. வீட்டில் சேட்டை செய்யும் குழந்தைகளுக்கு, இந்த மக்கன் பேடாவை செய்து கொடுக்கலாம்.

செய்முறை



 முதலில் சர்க்கரை பாங்கு தயாரிக்க வேண்டும். கடாயில், மூன்று கப் சர்க்கரை போட்டு, அதே அளவில் தண்ணீர் ஊற்றவும்.

 சர்க்கரை கரைந்த பின், 10 நிமிடம் கொதிக்கவிட்டு, பாகு தயாரிக்கவும்.

 குறிப்பிட்ட பதத்தை எட்டும் போது, இரண்டு கிராம் குங்கும பூ, அரை ஸ்பூன் ஏலக்காய் துாள் போட்டு நன்றாக கலந்து அடுப்பை அணைத்துவிடுங்கள்.

 பவுலில் ஒரு கப் மைதா, ஒரு ஸ்பூன் சமையல் சோடா, அரை கப் இனிப்பு இல்லாத பால்கோவா, ஐந்து ஸ்பூன் வெண்ணெய், கால் கப் கட்டி தயிர் சேர்த்து மாவை பிசையவும்.

 சப்பாத்தி, பூரி மாவு போன்று பிசைய அவசியம் இல்லை. மெதுவாக நேரம் எடுத்து மாவு பிசையவும்.

 வெண்ணெய் இல்லாத பட்சத்தில், அதே அளவு நெய் பயன்படுத்தவும். தண்ணீர் பயன்படுத்த கூடாது.

 மக்கன் பேடாவுக்குள் பால்கோவா, முந்திரி, பாதாம், வால்நட் போன்றவற்றை பொடிப்பொடியாக நொறுக்கி சேர்க்கவும்.

 ஆற்காட மக்கன் பேடா தயாரிக்க, பிசைந்த மாவை இரட்டை கோலி குண்டு சைசில் உருட்டி, உள்ளே பொடியாக்கிய பொருட்களை சேர்க்க வேண்டும். பின், சிறிய சைஸ் வடை போன்று உள்ளங்கையில் வைத்து தட்டவும்.

 கடாயில் அரை லிட்டர் நல்லெண்ணெய் ஊற்றி, இந்த மாவினை போட்டு, மிதமான சூட்டில் வறுத்து எடுத்து, சர்க்கரை பாகில் போடவும்.

 8 மணி நேரம் பாகில் ஊறிய பின், ஆற்காடு மக்கன் பேடா ருசிக்கலாம்.



- நமது நிருபர் -

Advertisement