சோலார் மின் உற்பத்தி திட்டம் விசைத்தறியாளர் எதிர்பார்ப்பு

பல்லடம்:''விசைத்தறி ஜவுளி உற்பத்தி தொழில் மேம்பட, சோலார் மின் உற்பத்தி திட்டத்தை நிறைவேற்றி தர வேண்டும்'' என, விசைத்தறி உரிமையாளர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்களில், 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. இவற்றின் வாயிலாக, தினமும் ஒரு கோடி மீட்டர் காடா துணிகள் உற்பத்தி ஆகின்றன.

திருப்பூர் மற்றும் கோவை மாவட்ட விசைத்தறி உரிமையாளர் சங்க செயலாளர் பாலசுப்பிரமணியம் கூறியதாவது:

தமிழகத்தில், திருப்பூர், கோவை, ஈரோடு மாவட்டங்களில் அதிகளவு விசைத்தறிகள் உள்ளன. இவற்றில், 90 சதவீத தறிகள் கூலி அடிப்படையில்தான் இயங்கி வருகின்றன. பாவு நுால் தட்டுப்பாடு, கூலி பிரச்னை உள்ளிட்டவற்றால் நலிவடைந்துள்ள தொழிலை மீட்டெடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. தமிழக அரசால், ஆயிரம் யூனிட் இலவச மின்சாரம் விசைத்தறிகளுக்கு வழங்கப்படுகிறது.

இருப்பினும், ஆண்டுதோறும் உயர்த்தப்படும் மின் கட்டணத்தால், வருவாய் இழப்பு ஏற்படுகிறது. காரணம், திருப்பூர், கோவை மற்றும் ஈரோடு மாவட்டங்களில், குடோன் ஒன்றுக்கு குறைந்தபட்சம், 10க்கும் மேற்பட்ட விசைத்தறிகள் உள்ளன. இதனால், மின் பயன்பாடு, மாதம், 3 ஆயிரம் யூனிட்டுக்கு மேல் வருகிறது. ஆயிரம் யூனிட்டுக்கான தொகையை கழித்தாலும், 15 ஆயிரம் ரூபாய்க்கு மேல் மின் கட்டணம் செலுத்தியே ஆக வேண்டும் என்ற நிலை உள்ளது.

விசைத்தறிகளுக்கு சோலார் மின் உற்பத்தி திட்டத்தை கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம். இதனால், மின் கட்டணம் வெகுவாக குறையும் என்பதால், விசைத்தறியாளர்களுக்கு செலவு குறையும். மத்திய, மாநில அரசுகளின் மானியத்துடன் விசைத்தறி கூடங்களில் சோலார் பேனல்கள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement