ஈரானில் சிக்கிய இந்திய மருத்துவ மாணவர்கள்: மீட்கும்படி மத்திய அரசுக்கு வலியுறுத்தல்

3


டெஹ்ரான்: இஸ்ரேல் ராணுவத்தின் தாக்குதல் உக்கிரம் அடைந்துள்ள நிலையில், ஈரானில் படிக்கும் இந்திய மாணவர்கள், தங்களை மீட்க உதவும்படி மத்திய அரசை வலியுறுத்தி உள்ளனர்.


மேற்கு ஆசிய நாடான இஸ்ரேலுக்கும், ஈரானுக்கும் நீண்ட நாட்களாக மோதல் நீடித்து வருகிறது. ஈரானின் அணு ஆயுத தளங்கள், ஏவுகணை மையங்கள் மீது இஸ்ரேல் நேற்று சரமாரியான வான்வழி தாக்குதல் நடத்தியது. இருநூறுக்கு மேற்பட்ட போர் விமானங்கள் பங்கேற்ற இந்த தாக்குதலில், ஈரானின் மூன்று முக்கிய படைத்தளபதிகள் மற்றும் அணுசக்தி விஞ்ஞானிகள் பலர் கொல்லப்பட்டனர்.

மிகப்பெரிய அணு ஆயுத தளம் பலத்த சேதம் அடைந்தது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈரான் ட்ரோன்களை ஏவியது. மேலும் ஏவுகணைகளை வீசியது. இதில் பல கட்டடங்கள் சேதம் அடைந்தன.



@quote@இந்தத் தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து அங்குள்ள இந்திய மாணவர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியையும், பயத்தையும் ஏற்படுத்தி உள்ளது. quote


இது தொடர்பாக தெஹ்ரான் மருத்துவ அறிவியல் பல்கலையில் இரண்டாம் ஆண்டு மருத்துவம் படிக்கும் காஷ்மீரை சேர்ந்த தாபியா ஜாஹ்ரா கூறியதாவது: தற்போது நிலைமை அமைதியாக உள்ளது. நாங்கள் பாதுகாப்பாக இருக்கிறோம். ஆனால், பயமாக இருப்பதை போன்ற உணர்வு ஏற்படுகிறது. அதிகாலை 3:30 மணிக்கு தாக்குதல் நடந்தது. அப்போது நில அதிர்வு ஏற்பட்டது போன்ற உணர்வு ஏற்பட்டது. இது கவலையளிக்கும் அனுபவமாக இருந்தது. பல்கலை அதிகாரிகள் வந்து எங்களை சந்தித்தனர். அமைதியாக இருக்கும்படி கூறினர். ஆனால், பாதுகாப்பான பகுதிகள் குறித்து அவர்கள் எதுவும் கூறவில்லை. இங்கு பாதுகாப்பு சூழ்நிலையில் நிச்சயமற்ற சூழ்நிலை உள்ளது. இணையதள சேவையில் இடையூறு உள்ளதால் உறவினர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.


உ.பி.,யின் அசம்கார்க் நகரை சேர்ந்த ஆலிஷா ரிஸ்வி கூறியதாவது; நாங்கள் தங்கியிருக்கும் இடம் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய விவரங்கள் குறித்து இமெயில் செய்யும்படி இந்தியத் தூதரகம் தெரிவித்து உள்ளது. தேவைப்பட்டால், எங்களை மீட்பதற்காக தகவல்களை சேகரிக்கும் பணிகளில் ஈடுபட்டு உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.



@block_P@இரண்டு மாணவிகளும், 5.5 ஆண்டு மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளனர். தற்போது இரண்டாம் ஆண்டு படித்து வருகின்றனர். மேலும், இஸ்ரேல் தாக்குதல் காரணமாக ஈரான் வான்வெளி மூடப்பட்டு உள்ளதுடன், தெஹ்ரான் சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டு உள்ளது என்பதையும் உறுதி செய்துள்ளனர். விரைந்து மீட்கும்படி கூறியுள்ளனர்.block_P



@quote@இதனிடையே, ஈரானில் வசிக்கும் இந்தியர்கள் உதவிக்கு தொடர்பு கொள்ள வேண்டிய அவசர எண்களை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இதன்படி, ஈரானில் உள்ள இந்திய தூதரகத்தை +98 9128109115; +98 9128109109 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் எனக்கூறியுள்ளது.quote

Advertisement