ஒன்றிய அலுவலகத்தில் சேதமான கட்டடம் இடித்து அகற்ற எதிர்பார்ப்பு

சிவகாசி : வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் சேதம் அடைந்துள்ள கூட்ட அரங்கு கட்டடத்தால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே கட்டடத்தை இடித்து அகற்ற வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.

வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் 30 ஆண்டுகளுக்கு முன்பு கூட்ட அரங்கு கட்டடம் கட்டப்பட்டது. தற்போது இந்த கட்டடம் சேதம் அடைந்துள்ளது.

சேதமடைந்த இந்தக் கட்டடம் பொருட்கள் வைப்பறையாக பயன்பட்டு வருகிறது. ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு பல்வேறு தேவைகளுக்கும் வருகின்ற மக்கள் சேதம் அடைந்த கட்டடத்தின் அருகே காத்திருக்கின்றனர். தவிர ஒரு சிலர் தங்களது டூவீலர்களையும் கட்டடத்தின் அருகே நிறுத்துகின்றனர்.

சேதமடைந்த கட்டடத்தின் அருகிலேயே தீயணைப்பு மீட்பு நிலையமும் செயல்படுகின்றது. மக்கள் நடமாடும் போது கட்டடம் இடிந்து விழுந்தால் பெரிய அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் இக்கட்டத்தின் பின் பகுதி திறந்தவெளி பாராக மாறிவிட்டது.

ஏனெனில் சமூக விரோதிகள் சிலர் இங்குதான் மது அருந்துகின்றனர். எனவே பெரிய அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன்பு இக்கட்டடத்தை இடித்து அகற்ற வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement