எல்லையில் 'கேட்ச்' புதிய விதிமுறை

லண்டன்: கிரிக்கெட்டில் சமீப காலமாக எல்லைப் பகுதியில் சாகச 'கேட்ச்' பிடிக்கின்றனர்.

கடந்த 2023ல் ஆஸ்திரேலியாவில் நடந்த 'பிக் பாஷ்' தொடரில் ஜோர்டான் சில்க்(சிட்னி சிக்சர்ஸ்) அடித்த பந்தை எல்லை கோடு அருகே பிடித்த மைக்கேல் நேசர் (பிரிஸ்பேன் ஹீட்) 'பேலன்ஸ்' கிடைக்காமல் தடுமாறினார். பின் எல்லைக்கு வெளியே சென்று அந்தரத்தில் பந்தை பிடித்தார். மீண்டும் மைதானத்திற்குள் எறிந்து 'கேட்ச்' செய்தார். ஜோர்டான் அவுட் ஆனார். இதே போல 'ரிலே கேட்ச்' பாணியில் எல்லை தாண்டிய வீரர் பந்தை மைதானத்திற்குள் இருக்கும் மற்றொரு வீரரை நோக்கி எறிவார். அந்த வீரர் 'கேட்ச்' செய்வார். எல்லை கோட்டுக்கு வெளியே சென்ற வீரரின் கால் கீழே படாதபட்சத்தில் 'அவுட்' கொடுக்கப்படும். இத்தகைய 'கேட்ச்' சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து மெரில்போன் கிரிக்கெட் கிளப், ஐ.சி.சி., சேர்ந்து புதிய விதிமுறையை அறிவித்துள்ளன.
இதன்படி எல்லைக்கு வெளியே இனி பந்தை பிடிக்க கூடாது. எல்லையில் 'கேட்ச்' செய்யும் போது தடுமாறும் வீரர், பந்தை உள்ளே எறிந்துவிட்டு, மீண்டும் மைதானத்திற்குள் வந்து 'கேட்ச்' செய்யலாம். இதில் தவறில்லை. 'ரிலே கேட்ச்சில்' எல்லைக்கு பகுதிக்கு வெளியே இருந்து, உள்ளே இருக்கும் மற்றொரு வீரருக்கு பந்தை எறியலாம். ஆனால், 'கேட்ச்' பிடிப்பதற்கு முன் மைதானத்திற்குள் வந்துவிட வேண்டும். தவறினால், பவுண்டரி என அறிவிக்கப்படும். புதிய விதிமுறை 2026, அக்டோபரில் இருந்து அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வரும்.

Advertisement