மீனாட்சி கோயிலில் உணவு தயாரிக்கும் இடத்திற்கு தீயணைப்பு சான்று வாங்கவில்லை
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நாள்தோறும் அன்னதானம் வழங்குவதற்காக உணவு தயாரிக்கும் கொதிகலன் உள்ளிட்ட உபகரணங்கள் இருக்கும் இடத்திற்கு தீயணைப்புத்துறையின் தடையில்லா சான்று, உரிமம் இதுவரை பெறவில்லை என தெரியவந்துள்ளது.
இக்கோயிலில் நாள்தோறும் அன்னதானம் என்ற அடிப்படையில் தினமும் 200க்கு மேற்பட்டோருக்கு பழைய திருக்கல்யாண மண்டபம் எதிரே உணவு வழங்கப்பட்டு வருகிறது. புராதன இடம், பக்தர்கள் வந்து செல்லும் இடம் என்பதால் விதிமுறைகள்படி கோயில் நிர்வாகம் செயல்பட்டு வருகிறது. உணவு தயாரிக்க நீராவி கொதிகலன் உள்ளிட்ட ஆபத்தான உபகரணங்களை பயன்படுத்தும் இடத்திற்கு தீயணைப்புத்துறையின் தடையில்லா சான்று பெற்றிருக்க வேண்டும்.
ஆனால் இதுவரை பெறவில்லை என்கிறார் ஆலயம் காப்போம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தினகரன் சுந்தரம்.
நமது நிருபரிடம் அவர் கூறியதாவது:
தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் தீயணைப்புத்துறையிடம் கேட்டபோது அன்னதான கூடம், கிழக்கு அம்மன் சன்னதி நீராவி கொதிகலன் மூலம் உணவு தயாரிக்கும் இடத்திற்கு தடையில்லா சான்று, உரிமம் வழங்கப்பட வில்லை என தெரிவித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நீராவி கொதிகலனால் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. பக்தர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் ஏற்படும்.
விபத்து நடந்த பிறகு பக்தர்களுக்கு இழப்பீடு வழங்குவதில் எந்த பயனும் இல்லை.ஏற்கனவே 2018 பிப்.2ல் மின்கசிவால் கோயிலின் வீரவசந்தராயர் மண்டபம் முற்றிலும் சிதைந்தது. அதை ஒரு பாடமாக எடுத்துக்கொண்டு கோயில் நிர்வாகம் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
அதேபோல் கோயிலுக்கு சொந்தமான எழுகடல் தெருவில் வணிகவளாகம் உள்ளது.
இங்கு பிளாஸ்டிக் உள்ளிட்ட எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் விற்கப்படுகின்றன.
இங்கும் தீயணைப்புத்துறையின் தடையில்லா சான்றும், உரிமமும் கோயில் நிர்வாகம் பெறவில்லை. கோயிலில் திருப்பணிகள் நடக்கும் நிலையில் இதுகுறித்தும் அறநிலையத்துறை கவனம் செலுத்த வேண்டும்.
இவ்வாறு கூறினார்.
மேலும்
-
கல்வியில் சிறந்த தமிழகம் என்பதை உறுதிசெய்வோம்: சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
-
நிச்சயம் விஞ்ஞானியாக வருவீங்க; பழங்குடியின மாணவிக்கு ரூ.2 லட்சம் வழங்கி விஜய் பாராட்டு
-
இஸ்ரேல் தாக்குதலில் அமெரிக்கா பங்கு இல்லை; ஈரானுக்கு அதிபர் டிரம்ப் எச்சரிக்கை
-
4 நாட்கள் பயணம்; சைப்ரஸ், கனடா, குரோஷியா புறப்பட்டார் பிரதமர் மோடி!
-
துமகூரு பெயரை மாற்றுவதா?
-
39 ஆண்டுகளில் 117 முறை ரத்த தானம்