பல்லாயிரம் கனவு கண்டவர் பாரதி கவர்னர் ரவி பெருமிதம்

சென்னை, ''தமிழ் மொழி செம்மை அடைய தொண்டாற்றி, பல்லாயிரம் கனவு கண்டவர் பாரதி,'' என, தமிழக கவர்னர் ரவி பேசினார்.

பாரதியாரின் தமிழ் பெருமையை பேசும் வகையில், 'எண்ணித் துணிக' என்ற தலைப்பில், தமிழ் ஆளுமைகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி, நேற்று மாலை, கவர்னர் மாளிகையில் நடந்தது. முன்னதாக, வளாகத்தில் உள்ள பூங்காவில், கம்பர் வனம் திறக்கப்பட்டது.

பின், கவர்னர் ரவி பேசியதாவது:

தமிழ் தான் பழமை வாய்ந்த மொழி. இலக்கண இலக்கியத்தில் தொன்மை வாய்ந்த மொழி. ஆங்கிலேயர்கள் நம்முடைய கல்வி அமைப்பு , தொழில் நிறுவனங்கள், விவசாயம் உள்ளிட்டவற்றை அழித்தனர். தொழிற்சாலைகளில் மட்டுமே, ஆங்கிலம் படிக்க வேண்டும் என்ற நிலையை உருவாக்கினர்.

தாய் மொழி பேசினால் தாழ்வு மனப்பான்மை என்பது போன்ற உணர்வை ஏற்படுத்தினர். ஆங்கிலத்தில் பேசினால் மட்டுமே நீங்கள் படித்தவர்கள் என்ற ஒரு நிலை உருவானது.

திருவள்ளுவரை, ஷேக்ஸ்பியர் போன்றவர்களுடன் ஒப்பிட்டு பேசும்போது, எனக்கு மிகவும் கோபம் வருகிறது.

ஆங்கிலேயர்கள் கலாசாரம், 300 அல்லது 400 ஆண்டுகள் மட்டுமே பழமையானது. அப்படி இருக்கையில், நம்முடைய ஆளுமைகளை அவர்களுடன் ஒப்பிடுவது தவறு.

தமிழ் மொழி செம்மை அடைய பாரதியார் உள்ளிட்ட பலர், தமிழ் மொழிக்காக தொண்டாற்றினர். பல நுாறு ஆண்டுகளுக்கு பிறகும், நாம் பாரதியாரை விட்டு விடக்கூடாது. பல்லாயிரம் கனவு கண்டவர் பாரதி.

இவ்வாறு கவர்னர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில், மனித உரிமை கமிஷன் நீதிபதி ராமசுப்பிரமணியன், 'மணிமேகலை' பிரசுர நிர்வாக இயக்குநர் ரவி தமிழ்வாணன், பேராசிரியர் ஞானசம்பந்தன், எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர், கவிஞர்கள் சினேகன், விவேகா மற்றும் தமிழ் பேராசிரியர்கள், மாணவ - மாணவியர் பங்கேற்றனர்.

Advertisement