கொரட்டூர் ஏரியில் கழிவுநீர் கண்டித்து ஆர்ப்பாட்டம்

கொரட்டூர், கொரட்டூர் ஏரி 590 பரப்பளவில் அமைந்துள்ளது. ஏரியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

இதை, சென்னை மாநகராட்சி மற்றும் அம்பத்துார் மண்டல அதிகாரிகள் மதிக்கவில்லை எனக்கூறி, கொரட்டூர் ஏரி பாதுகாப்பு மக்கள் இயக்கம் சார்பில், கடந்த 12ம் தேதி, அம்பத்துார் மண்டல அலுவலகம் முற்றுகை போராட்டம் நடத்தியது.

இந்த நிலையில், கொரட்டூர், ஒண்டிவீரன் கோவில் அருகே உள்ள மதகு வழியாக, கொரட்டூர் ஏரிக்குள் நேற்று காலை கழிவுநீர் சென்றது. இதை கண்ட கொரட்டூர் ஏரி பாதுகாப்பு மக்கள் இயக்கத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.

இது குறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும், அவர்கள் அங்கு வராததால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், கொரட்டூர் ஏரியில் கழிவுநீர் கலக்கும் இடத்திற்குள் இறங்கினர்.

தகவலறிந்து வந்த கொரட்டூர் போலீசார், அவர்களுடன் பேச்சு நடத்தினர். நாளை மண்டல அதிகாரிகளுடன் பேச்சு நடத்த ஏற்பாடு செய்வதாக, போலீசார் கூறியதை அடுத்து கலைந்து சென்றனர்.

Advertisement