இஸ்ரேல், ஈரான் போர் பதற்றத்தால் தகிக்கிறது கச்சா எண்ணெய் விலை

புதுடில்லி:மேற்காசிய நாடுகளிடையே நிலவும் பதற்றம் காரணமாக, கச்சா எண்ணெய் விலை சூடுபிடித்துள்ளது. ஒரு பேரல் பிரென்ட் கச்சா எண்ணெய் கிட்டத்தட்ட 60 டாலராக இருந்த நிலையில், தற்போது 73.30 டாலரை எட்டியுள்ளது.
அணுஆயுத தயாரிப்பில் இறுதிக்கட்டத்தை ஈரான் எட்டியதால், இஸ்ரேல் மீது அது அணுகுண்டுகளை வீசி தாக்கக்கூடும் என, அந்நாட்டு உளவுப் படை தகவல் அளித்தது. இதையடுத்து, இஸ்ரேலிய விமானப் படை, ஈரானின் 10க்கும் மேற்பட்ட இடங்களில் குண்டு வீச்சை நேற்று முன்தினம் துவங்கியது.
இதற்கு பதிலடியாக, இஸ்ரேலின் டெல் அவிவ் உள்ளிட்ட பல இடங்களை குறிவைத்து, நுாற்றுக்கணக்கான ட்ரோன்களை ஈரான் ஏவி, தாக்குதல் நடத்தியது.
ஈரானுக்கு ஓமன் ஆதரவளித்துள்ள நிலையில், மேற்காசிய நாடுகளிடையே தற்போது கடும் பதற்றம் நிலவுகிறது. இதன் தொடர்ச்சியாக, எண்ணெய் வள நாடுகளைக் கொண்ட பகுதி என்பதால், கச்சா எண்ணெய் வினியோகம் பாதிக்கப்படுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
இஸ்ரேல், ஈரான் போர் காரணமாக, கச்சா எண்ணெய் விலை வேகமாக அதிகரித்து வருகிறது. பிரென்ட் ரக கச்சா எண்ணெய் நேற்று முன்தினம் ஒரே நாளில் 5.65 சதவீதம் விலை உயர்ந்தது. ஒரு பேரல் 78 டாலரை தொட்ட நிலையில், வர்த்தக முடிவில் சிறிது இறங்கி 73.30 டாலர் ஆனது.
போர் காரணமாக, கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்கவும் வினியோகத்தைக் கட்டுப்படுத்தவும் எண்ணெய் வள நாடுகள் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதனால், வினியோகத் தொடர் பாதிக்கப்பட்டு, கச்சா எண்ணெய் விலை மேலும் உயர வாய்ப்பு உள்ளது.
இஸ்ரேல், ஈரான் போர் காரணமாக, இந்திய ரூபாய் மதிப்பு அதிக வீழ்ச்சியை சந்திக்கக்கூடும் என கரன்சி சந்தை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். நேற்று டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு 55 காசு சரிந்து, ஒரு டாலர் 86 ரூபாயை தாண்டியது.
- ஹர்தீப் சிங் புரி
அமைச்சர், பெட்ரோலிய துறை
கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதால், உடனடி பாதிப்பு ஏதும் ஏற்படாது. இந்தியா, போதிய அளவில் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்து, இருப்பு வைத்துள்ளதால், அடுத்த சில மாதங்கள் வரை பாதிப்பு இருக்காது.
மேலும்
-
கல்வியில் சிறந்த தமிழகம் என்பதை உறுதிசெய்வோம்: சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
-
நிச்சயம் விஞ்ஞானியாக வருவீங்க; பழங்குடியின மாணவிக்கு ரூ.2 லட்சம் வழங்கி விஜய் பாராட்டு
-
இஸ்ரேல் தாக்குதலில் அமெரிக்கா பங்கு இல்லை; ஈரானுக்கு அதிபர் டிரம்ப் எச்சரிக்கை
-
4 நாட்கள் பயணம்; சைப்ரஸ், கனடா, குரோஷியா புறப்பட்டார் பிரதமர் மோடி!
-
துமகூரு பெயரை மாற்றுவதா?
-
39 ஆண்டுகளில் 117 முறை ரத்த தானம்