முதல்முறையாக அமெரிக்காவுக்கு ஒரு கோடி முட்டை ஏற்றுமதி

1

நாமக்கல்:நாமக்கல்லில் இருந்து துாத்துக்குடி துறைமுகம் வழியாக, கடந்த மாதம் அமெரிக்காவுக்கு முதன் முறையாக, ஒரு கோடி முட்டைகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து, தமிழக முட்டை கோழிப்பண்ணையாளர்கள் மார்க்கெட்டிங் சொசைட்டி தலைவர் வாங்கிலி சுப்ரமணியம், முட்டை ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் பன்னீர்செல்வம் ஆகியோர் கூறியதாவது:

அமெரிக்க அரசு, முட்டை இறக்குமதிக்கு ஒப்புதல் அளித்ததை அடுத்து, முதற்கட்டமாக, கடந்த மாதம், துாத்துக்குடி துறைமுகத்தில் இருந்து முட்டை ஏற்றுமதி செய்யப்பட்டது.

குளிர்சாதன வசதி கொண்ட 21 கன்டெய்னர்களில், தலா 4.75 லட்சம் என, மொத்தம், ஒரு கோடி முட்டைகள் கப்பலில் அனுப்பி வைக்கப்பட்டன.

இந்த கன்டெய்னர்கள், 30 முதல், 40 நாட்களில் அமெரிக்கா சென்றடையும். அதன்படி இன்னும் ஓரிரு நாட்களில் முட்டைகள் அங்கு சென்றடைந்துவிடும்.

இந்தியாவில் இருந்து ஏற்றுமதியாகும், 90 சதவீத முட்டைகள், நாமக்கல் மண்டலத்தில் இருந்து தான் அனுப்பி வைக்கப்படுகின்றன.

துபாய், பஹ்ரைன், கத்தார், ஓமன், ஆப்ரிக்க நாடுகளுக்கு, மாதம் ஒன்றுக்கு, 20 கோடி முட்டை ஏற்றுமதி செய்யப்படுகிறது.

முட்டைக்கு ஸ்திரமான சந்தை இருந்தால் தான், விலை சரிவை தடுக்க முடியும். அவற்றை கருத்தில் கொண்டு, கோழிப்பண்ணையாளர்கள் வெளிநாடுகளுக்கு முட்டை ஏற்றுமதி செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

 ஆறு கோடி முட்டைக்கோழிகள் வாயிலாக தினமும், 5 கோடி முட்டைகள் உற்பத்தி

 சத்துணவு திட்டத்திற்கு தினமும், 60 லட்சம் முட்டைகள் வினியோகம்

 வெளிநாடுகளுக்கு தினமும் 70 லட்சம் முட்டைகள் ஏற்றுமதி

 மீதமுள்ள முட்டைகள் வெளிமாநிலங்களுக்கு விற்பனை

Advertisement