காதல் திருமண விவகாரத்தில் சிறுவன் கடத்தல்: புரட்சி பாரதம் எம்.எல்.ஏ., ஜெகன்மூர்த்தி தலைமறைவு

9

திருவள்ளூர்:காதல் திருமணம் செய்த இளம்பெண்ணை மீட்பதற்காக, காதலனின் தம்பியான 17 வயது சிறுவனை கடத்திய வழக்கில், ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கில் தொடர்புள்ளதாக சந்தேகிக்கப்படும் புதிய பாரதம் கட்சி தலைவரும், கே.வி.குப்பம் தொகுதி எம்.எல்.ஏ.,வுமான பூவை ஜெகன்மூர்த்தியிடம் விசாரணை நடத்த அவரது வீட்டிற்கு, திருவள்ளூர் எஸ்.பி., தலைமையிலான போலீசார் சென்றனர். அப்போது, பூவை ஜெகன்மூர்த்தி தலைறைவாகிவிட்டதாகவும், தொடர்ந்து அவரை தேடி வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:

திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு ஒன்றியம், களாம்பாக்கத்தை சேர்ந்தவர் லட்சுமி, 44. கணவர் இழந்தவர். இவருக்கு இரண்டு மகன்கள். மூத்த மகன் தனுஷ், 23, சமூக வலைதளமான 'இன்ஸ்டாகிராம்' வாயிலாக, தேனியை சேர்ந்த விஜயஸ்ரீ, 21, என்ற பெண்ணுடன் பழகியுள்ளார். வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும், இருவரும் காதலித்துள்ளனர்.

இவர்களின் காதல் விஜயஸ்ரீயின் குடும்பத்தினருக்கு தெரியவந்துள்ளது. அவரது தந்தை வனராஜ், 55, தன் மகளின் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். குடும்பத்தினரும் விஜயஸ்ரீயை கண்டித்துள்ளனர்.

காதல் திருமணத்திற்கு குடும்பத்தினர் சம்மதிக்க போவதில்லை என்பது தெரிந்ததும், இருவரும் வீட்டை விட்டு வெளியேறி, திருமணம் செய்து கொண்டு தங்கள் விருப்பப்படி வாழ முடிவு செய்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து, விஜயஸ்ரீயை தேனியில் இருந்து அழைத்து வந்த தனுஷ், ஏப்., 15ல் சென்னையில் பதிவு திருமணம் செய்துள்ளார். தொடர்ந்து இருவரும் தலைமறைவாகினர்.

விஜயஸ்ரீ காணாமல் போனது தெரியவந்ததும், அவரின் குடும்பத்தினர் கடும் ஆத்திரமடைந்தனர். தங்களுக்கு தெரிந்த அனைத்து தொடர்புகளையும் பயன்படுத்தி, விஜயஸ்ரீயை மீட்டு, வீட்டுக்கு அழைத்து வர முடிவு செய்துள்ளனர்.

இதன்படி வனராஜ், தனக்கு நெருங்கிய தொடர்பில் இருந்த மதுரையை சேர்ந்த மகேஸ்வரி, 55, என்பவரை அணுகி உள்ளார். மகேஸ்வரிக்கு, திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த அரசியல் பிரபலங்கள் மற்றும் வழக்கறிஞர்களுடன் தொடர்பு இருந்ததால், மகளை மீட்டு விடலாம் என, வனராஜ் நம்பினார்.

பூந்தமல்லி, ஆண்டர்சன்பேட்டையைச் சேர்ந்தவரும், புரட்சிபாரதம் கட்சியின் தலைவருமான வேலுார் மாவட்டம் கே.வி.குப்பம் தொகுதி எம்.எல்.ஏ., பூவை ஜெகன்மூர்த்தி வாயிலாக, மகளை மீட்கும் நடவடிக்கைகளை, வனராஜ் குடும்பத்தினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில், தனுஷின் குடும்பத்தினருக்கு அரசியல்வாதிகள் மட்டுமின்றி, வழக்கறிஞர்களும், விஜயஸ்ரீயை ஒப்படைக்கும்படி மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால், தனுஷின் தாய் லட்சுமி செய்வதறியாது திகைத்தார்.

இதைத் தொடர்ந்து, வனராஜ், அவரது உறவினர்கள் மணிகண்டன், 46, கணேசன், 47, ஆகிய மூவரும், மூன்று வாகனங்களில் ஆட்களை திரட்டிக் கொண்டு திருவள்ளூர் நோக்கி புறப்பட்டனர்.

'டொயோட்டா அர்பன் குரூசர், மஹேந்திர எக்ஸ்.யூ.வி., மற்றும் ஹூண்டாய் ஐ20' ஆகிய கார்களில் அவர்கள், திருவாலாங்காடு வந்துள்ளனர். பூவை ஜெகன்மூர்த்தியின் ஆலோசனைப்படி, பூந்தமல்லி அடுத்த துத்தம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் சரத்குமார், 35, என்பவரை, அவர்கள் சந்தித்துள்ளனர்.

பின், அனைவரும், கடந்த 6ம் தேதி நள்ளிரவு 12:00 மணியளவில், களாம்பாக்கத்திற்கு சென்றுள்ளனர். அங்கு தனுஷ் இல்லாததால், அவரது தாய் லட்சுமியை மிரட்டியுள்ளனர்.

தனுஷ் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என லட்சுமியும், அவரது 17 வயது இளைய மகனும் கூறியுள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த வனராஜ், தனுஷின் தம்பியை காரில் ஏற்றி கடத்தி சென்றுள்ளனர். தனுஷ் மற்றும் விஜயஸ்ரீயை ஒப்படைத்தால் மட்டுமே, சிறுவனை விடுவிப்போம் என, மிரட்டி சென்றுள்ளனர். அந்த கார், காவல் துறையின் உயர் அதிகாரியான ஏ.டி.ஜி.பி., பயன்படுத்துவது என கூறப்படுகிறது.

இதையடுத்து, காவல் அவசர உதவி எண் 100 வாயிலாக, போலீசாருக்கு தன் இளையமகனை கடத்தி சென்றதாகவும், மூத்த மகனை வெறியோடு ஒரு கும்பல் தேடி வருவாகவும் லட்சுமி புகார் தெரிவித்தார். அக்கம்பக்கத்தவர்கள் யோசனைப்படி, 'ஆன்லைன்' வாயிலாகவும் போலீசாருக்கு லட்சுமி புகார் அளித்தார்.

இதையடுத்து, போலீசார் விசாரணையை துவக்கினர்.

இதையறிந்த வனராஜ் மற்றும் அவரது உறவினர்கள், மறுநாள் 7ம் தேதி அதிகாலை 2:00 மணிக்கு சிறுவனை மீண்டும் காரில் அழைத்து வந்து வீட்டருகே இறக்கிவிட்டு மாயமாகினர்.

இதற்கிடையே விசாரித்து வந்த தனிப்படை போலீசார், விஜயஸ்ரீயின் தந்தை வனராஜ், உறவினர்கள் மணிகண்டன், கணேசன், மதுரையைச் சேர்ந்த மகேஸ்வரி, பூந்தமல்லியைச் சேர்ந்த வழக்கறிஞர் சரத்குமார் ஆகிய ஐந்து பேரையும் நேற்று முன்தினம் கைது செய்தனர்.

அவர்களை தொடர்ந்து,புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் பூவை ஜெகன் மூர்த்தியிடம் விசாரணை நடத்த போலீசார் விரைந்தனர்.

நேற்று காலையில் இது குறித்து தெரியவந்த புரட்சி பாரதம் கட்சியினர், பூவை ஜெகன்மூர்த்தி வீட்டுக்கு முன் திரண்டனர். அவரது கட்சியினர், பல இடங்களில் மறியலிலும் ஈடுபட்டனர்.

நேற்று மதியம் பூவை ஜெகன்மூர்த்தியின் வீட்டிற்கு திருவள்ளூர் எஸ்.பி., சீனிவாச பெருமாள் தலைமையில், திருவாலங்காடு போலீசார் சென்றனர்.

அப்போது வீட்டின் கேட்டை பூட்டிய புதிய பாரதம் கட்சியினர், போலீசாரை முற்றுகையிட்டனர். அவர்களுடன் போலீசார் பேச்சு நடத்தி, கூட்டத்தை கட்டுப்படுத்தி வீட்டிற்குள் சென்றனர்.

அங்குள்ள பல அறைகளில் தேடியும், பூவை ஜெகன் மூர்த்தி இல்லை. தொடர்ந்து, அவர் தலைமறைவாகிவிட்டதாக நேற்றிரவு போலீசார் தெரிவித்தனர். தொடர்ந்து அவரை தேடி வருவதாகவும் அவர்கள் கூறினர்.

Advertisement