தென்னேரி ஏரிக்கரையில் நட்ட பனை விதைகள் கன்றுகளாக செழுமை

வாலாஜாபாத்:தென்னனேரி ஏரிக்கரையில், விதைகள் தன்னார்வ அமைப்பு சார்பில், நடப்பட்ட பனை விதைகள், மர கன்றுகளாக வளர்ந்து செழுமையாக காட்சி அளிக்கிறது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பொருட்டு, விதைகள் தன்னார்வ அமைப்பு சார்பில், நீர்நிலைகள், பள்ளி, கல்லுாரி வளாகங்கள் மற்றும் அரசு பொது இடங்களில் மரக்கன்றுகள் நடவு செய்யும் பணி தொடர்ந்து மேற்கொள்ளப்படுகின்றன.

சில இடங்களில், ஊராட்சி நிர்வாகம் மற்றும் தனியார் நிறுவனத்துடன் இணைந்து, குருங்காடு உருவாக்குதல் திட்டமும் மேற்கொள்ளப்படுகிறது.

இதன் ஒரு பகுதியாக, வாலாஜாபாத் ஒன்றியம், தென்னேரி ஏரிக்கரையையொட்டி, 2022ல், 3,000 பனை விதைகள் நடப்பட்டன. அதில் குறிப்பிட்ட அளவிலான விதைகள் மரக்கன்றுகளாக வளர்ந்து, தற்போது செழுமையாக உள்ளது.

நிலத்தடி நீர் பாதுகாப்பிற்கு பனை மரங்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளதால், இவ்வாறான செயல்பாடு இயற்கை ஆர்வலர் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

இதுகுறித்து, விதைகள் தன்னார்வ அமைப்பாளர் பசுமை சரண் கூறியாவது:

கடந்த 2012ல் விதைகள் தன்னார்வ அமைப்பு துவங்கி, இலவச நர்சரி கார்டன் அமைத்து அதன் வாயிலாக நாட்டு மரக்கன்றுகளை உருவாக்கி, பொது மக்கள் விருப்பம் தெரிவிக்கும் பகுதிகளில் நடவு செய்து தருகிறோம்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில், நான்கு ஆண்டுகளில், உத்திரமேரூர், தென்னேரி, சாலவாக்கம், வயலக்காவூர், சேர்காடு, திருவாங்கரைணை போன்ற ஏரி உட்பட 82 நீர்நிலைகளில், 4 லட்சம் பனை விதைகள் நடவு செய்துள்ளோம்.

பனை மட்டுமின்றி மற்ற நாட்டு மரக்கன்றுகளும் நட்டு உள்ளோம்.

விதைகள் / மரக்கன்றுகள் நட விருப்பம் உள்ளோர், தங்கள் ஊரில் ஆட்சேபனையற்றதான இடம் தேர்வு செய்து அனுமதிக்கும் பட்சத்தில் விதைகள் தன்னார்வ அமைப்பை, 88702 81261 என்ற மொபைல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் அளிக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement