'பார்க்கிங்' ஏரியாவாக மாறிய சாலை விபத்து அச்சத்தில் வாகன ஓட்டிகள்

திருமழிசை:சென்னை - பெங்களூரு அதிவிரைவு தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும், 20க்கும் மேற்பட்ட கிராமவாசிகள் செல்லும் வகையில் இருவழிப்பாதை இணைப்பு சாலை அமைக்கப்பட்டுள்ளது.

நசரத்பேட்டை, திருமழிசை, செம்பரம்பாக்கம், தண்டலம், இருங்காட்டுக்கோட்டை உட்பட பல இடங்களில் உள்ள இணைப்பு சாலைகள், வாகனங்கள் நிறுத்தும் இடமாக மாறிவிட்டது.

மேலும், இருவழியாக உள்ள இணைப்பு சாலை, ஒருவழிச்சாலையாக மாறியுள்ளதால் அடிக்கடி விபத்துகளும் நடந்து வருகின்றன.

சில இடங்களில் இணைப்பு சாலை ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ளதால், தடுப்புகள் அமைக்கப்பட்டு வாகன போக்குவரத்தும் தடை செய்யப்பட்டுள்ளது.

இதனால், இவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.

எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள், சென்னை - பெங்களூரு அதிவிரைவு தேசிய நெடுஞ்சாலையின் இணைப்பு சாலை பகுதியில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரி கூறியதாவது:

சென்னை - பெங்களூரு அதிவிரைவு தேசிய நெடுஞ்சாலை, குறிப்பிட்ட நேரத்தில் வாகனங்கள் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன.

மேலும், நெடுஞ்சாலையோரம் உள்ள கிராமவாசிகள் வந்து செல்லும் வகையில், இருவழி இணைப்பு சாலை அமைக்கப்பட்டுஉள்ளது.

இந்த சாலையில் வாகனங்கள் ஆக்கிரமித்து நிறுத்துப்படுவது குறித்து, காவல் துறையினர் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement