அம்மையப்பநல்லுாரில் குடிநீர் தொட்டி சேதம்

உத்திரமேரூர்:அம்மையப்பநல்லுாரில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி சேதமடைந்து உள்ளது.

உத்திரமேரூர் ஒன்றியம், அம்மையப்பநல்லுார் ஊராட்சியில் இருளர் குடியிருப்பு, திடீர் நகர், அய்யப்பா நகர், அம்மையப்பநல்லுார் ஆகிய துணை கிராமங்கள் உள்ளன.

இங்கு, 200க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள குடியிருப்புகளுக்கு தேவையான குடிநீரை, ஊராட்சி நிர்வாகத்தினர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, கைக்குழாய் ஆகியவற்றின் வாயிலாக விநியோகம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், அம்மையப்பநல்லுார் கிராமத்தில் மானாம்பதி செல்லும் சாலையோரம், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது.

கடந்த 30 ஆண்டுக்கு முன் கட்டப்பட்ட, இந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி முறையாக பராமரிப்பு இல்லாமல் உள்ளது. இதனால், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் தூாண்கள் சேதமடைந்து, கான்கிரீட் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகின்றன.

சேதமடைந்துள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இடிந்து விழும் நிலையில் உள்ளது.

எனவே, சேதமடைந்துள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை சீரமைக்க, ஊரக வளர்ச்சி துறையினர் நடவடிக்கை எடுக்க, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement