பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை மஞ்சள்நீர் கால்வாய் துார்வாரும் பணி துவக்கம்

காஞ்சிபுரம்:தென்மேற்கு பருவமழையையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, காஞ்சிபுரம் மஞ்சள்நீர் கால்வாய் துார்வாரும் பணி துவங்கியுள்ளது.

காஞ்சிபுரம் நகரில் பெய்யும் மழைநீர் வெளியேறும் வகையில் அமைக்கப்பட்ட மஞ்சள்நீர் கால்வாய், புத்தேரி தெரு - கிருஷ்ணன் தெரு சந்திப்பில் துவங்கி, பிள்ளையார்பாளையம், பல்லவர்மேடு, ஆனந்தாப்பேட்டை, திருக்காலிமேடு, நேதாஜி நகர் வழியாக சென்று நத்தப்பேட்டை ஏரியில் கலக்கிறது.

தென்மேற்கு பருவமழையையொட்டி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மாவட்டம் முழுதும் மழைநீர் கால்வாயை துார்வாரும்படி, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, காஞ்சிபுரம் மாநகராட்சி நிர்வாகம் சார்பில், மஞ்சள்நீர் கால்வாயில் வளர்ந்துள்ள செடி, கொடிகள், கோரைபுற்கள், பிளாஸ்டிக் கழிவுகள், மழைக்கு அடித்து வரப்பட்ட மண் குவியல் உள்ளிட்டவை, பொக்லைன் இயந்திரம் வாயிலாக துார்வாரும் பணி துவக்கப்பட்டுள்ளது.

Advertisement