போதையில் அத்துமீறல் நீரில் மூழ்கடித்து பெண் கொலை

திருவாரூர்:கொரடாச்சேரி அருகே ஆடு மேய்த்த பெண்ணிடம் பாலியல் அத்துமீறி, அவரை ஆற்றில் மூழ்கடித்துக் கொன்ற இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

திருவாரூர் மாவட்டம், பெருமாளகரத்தை சேர்ந்தவர் மணிகண்டன், 45. இவரது மனைவி சுதா, 40. இவர், நேற்று பாண்டவையாறு ஓரம் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார்.

அப்போது, அதே ஊரை சேர்ந்த அஜித்குமார், 30, பாலாக்குடி முருகன், 40, ஆகிய இருவரும் வந்துள்ளனர்.

சுதாவிடம், குடிபோதையில் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளனர். அவர் சப்தம் போட்டதால், ஆத்திரமடைந்த இருவரும், அருகில் இருக்கும் பாண்டவை ஆற்றில் சுதாவை மூழ்கடித்துள்ளனர்.

அப்போது, அவரை காப்பாற்ற அவ்வழியாக ஓடி வந்தவர்களை பார்த்த அஜித்குமார், முருகன் தப்பினர். சுதா மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றும், வழியிலேயே இறந்தார்.

கொரடாச்சேரி போலீசார் வழக்கு பதிந்து, தப்பிய இருவரையும் தேடி வருகின்றனர்.

Advertisement