ரூ.230ல் 'வகுப்பறை தோழன்' கருவி தயாரிப்பு வகுப்பறை கற்பித்தலுக்கு பயன்: 'டயட்' முதல்வர்


நாமக்கல், ''ரூபாய், 230ல் தயாரிக்கப்பட்ட, 'வகுப்பறை தோழன்' கருவியை கொண்டு, ஆசிரியரின் குரல் ஒலியை பெருக்கி, வகுப்பறை கற்பித்தலுக்கு பயன்படுத்தலாம்,'' என, மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் செல்வம் பேசினார்.
நாமக்கல் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம்(டி.ஐ.இ.டி.,), நாமக்கல் பவுல்ட்ரி டவுன் ரோட்டரி சங்கம் சார்பில், தன்னார்வ ஆசிரியர்களுக்கு, 'வகுப்பறை தோழன்' மின்கருவி தயாரித்தலுக்கான பணிமனை நேற்று நடந்தது. நிறுவன விரிவுரையாளர் தேவராசு வரவேற்றார். ரோட்டரி சங்க தலைவர் பிரபாகரன் பணிமனையை தொடங்கி வைத்தார். மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் செல்வம் தலைமை வகித்து பேசியதாவது: மின்சார பொருட்களை தயாரிப்பதற்கு, சிறுசிறு மின்சார பொருட்களின் நன்மைகள் மற்றும் அவற்றின் பயன்பாடுகளை விதிகளாகவும், கொள்கைகளாகவும் ஆசிரியர்கள் அறிந்திருக்கின்றனர். மின்சார கருவிகள் தயாரிப்பதற்கு, இதுமட்டும் போதாது. இயந்திர திறனும் இருந்தால் மட்டுமே, மின்சார கருவிகளை உருவாக்க முடியும்.
அதன்படி, 230 ரூபாயில் தயாரிக்கப்பட்ட, 'வகுப்பறை தோழன்' மின்கருவியை கொண்டு, ஆசிரியரின் குரல் ஒலியை பெருக்கி, வகுப்பறை கற்பித்தலுக்கு பயன்படுத்தலாம். மேலும், பண்பலை வானொலியாகவும், அகில தொடர்பாட்டு கேபிள் வழியாக, 'யு-டியூப்'பில் இருந்து, கல்வி சார்ந்த உரைகளை, ஆடியோவாக மாற்றி மாணவர்கள் கேட்கலாம். இக்கருவி, கையகல பிளாஸ்டிக் பெட்டியில் அடங்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. அதனால், இக்கருவியை எளிதாக அடுத்தடுத்த வகுப்பறைகளுக்கு எடுத்துச் செல்ல முடியும்.
இவ்வாறு அவர் பேசினார்.
விரிவுரையாளர்கள் சிவபெருமாள், வேதராஜபால்சன், கருவி வடிவமைப்பாளர் அருளானந்தம், ஆசிரியர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

தயாரிக்க பயன்படும் பொருள்
'வகுப்பறை தோழன்' கருவியில், தாய்ப்பலகை (மதர்போர்டு), மின்வழங்கி, ஒலிபெருக்கி, மின்கல மின்னுாட்டி, வானிலை வாங்கி, ஒலி வாங்கி போன்ற முதன்மை மின்சார பொருட்கள், செயல்படும் பொருட்களாக பயன்படுத்தப்பட்டன.
மேலும், மெழுகுவர்த்தி, தீப்பெட்டி, பழைய துணி, கத்திரிக்கோல், கத்தி, முடிகோதி, மார்கர் பேனா, அளவுகோல், திருப்புளி போன்ற அன்றாட நடைமுறையில் உள்ள எளிய பொருட்களை பயன்படுத்தி, இக்கருவி வடிவமைக்கப்பட்டுள்ளது.

Advertisement