500 யூனிட் கிராவல் மண் பறிமுதல் 'மாபியா' கும்பலை வளைத்து பிடிக்க வலியுறுத்தல்

காங்கேயம், காங்கேயம் அருகே தனியார் நிலத்தில் சட்டவிரோதமாக கிராவல் மண் பதுக்கப்பட்ட புகாரில், கனிமவளத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு, மண் கடத்தலில் ஈடுபட்ட லாரியை பறிமுதல் செய்தனர்.

திருப்பூர் மாவட்டத்தில் விவசாய நிலங்களில் இருந்து கிராவல் மண் அதிகம் அள்ளப்பட்டு கடத்தி விற்பனை செய்யப்படுவதாக தொடர்ச்சியாக புகார் செல்கிறது. இந்நிலையில் காங்கேயம் அருகே ஆலம்பாடி ஊராட்சி, கல்லேரி- சிவன்மலை சாலையில் தனியார் நிலத்தில், கிராவல் மண் மற்றும் கருங்கற்கள் பதுக்கி வைக்கப்பட்டு விற்பனை நடப்பதாக, திருப்பூர் மாவட்ட கட்டுப்பாட்டு அறைக்கு புகார் சென்றது. நடவடிக்கை இல்லாத நிலையில் விற்பனை ஜரூராக நடந்தது.
இந்தநிலையில் கனிமவளத்துறை உதவி புவியியலாளர் வெங்கடேசன் தலைமையிலான குழுவினர், நேற்று மதியம் சம்பந்தப்பட்ட இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். இதில், 500 யூனிட் கிராவல் மண் பதுக்கி வைத்து, விற்பனை செய்து வந்தது தெரிந்தது. மண் கடத்திய லாரியை பறிமுதல் செய்து போலீசில் ஒப்படைத்தனர். இச்சம்பவம் குறித்து காங்கேயம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
காங்கேயத்தில் மண் மாபியா குறித்து சிறப்பு குழு நியமித்து, மாவட்ட நிர்வாகம் விசாரித்து நடவடிக்கை எடுக்க, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து கனிமவளத்துறை துணை இயக்குனர் சசிகுமார் கூறியதாவது: சம்பந்தப்பட்ட இடத்தில் இருந்த வண்டிகள் குறித்தும், குவிக்கப்பட்ட மண் குறித்தும் அளவீடு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு கூறினார்.

Advertisement