பைக்குகள் மோதி விபத்து காரைக்காலில் இருவர் பலி

காரைக்கால்:காரைக்கால் அருகே இரு டூ-வீலர்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.

புதுச்சேரி மாநிலம், காரைக்கால், நெடுங்காடு அருகே மேலகாசாகுடி, காஞ்சிபுரம் கோவில்பத்து பகுதியில் உள்ள கன்னியம்மன் கோவில் திருவிழா நேற்று முன்தினம் நடந்தது.

இதை காண மேலகாசாகுடி, அகரம் பகுதியை சேர்ந்த பிரசாந்த், 23, வடபாதி சந்தோஷ், 28, தென்பாதி அருண்குமார், 30, விஜயபாபு, 41, ஆகியோர் ஒரே பைக்கில் சென்றனர்.

பைக்கை பிரசாந்த் ஒட்டினார். அங்குள்ள தனியார் பள்ளி அருகே சென்றபோது, எதிரே செருமாவிலங்கை பகுதியை சேர்ந்த ஹரிகரன், 21, பாவட்டக்குடி வில்லியம் ஆடம், 22, ஆகியோர் பைக்கில் வந்தனர்.

இரு பைக்குகளும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் ஆறு பேரும் துாக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர்.

அங்கிருந்தவர்கள் அவர்களை, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சந்தோஷ், பிரசாந்த் சிகிச்சை பலனின்றி இறந்தனர். மற்ற நால்வரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காரைக்கால் நகர போக்குவரத்து போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement