ஒரு நாள் மழைக்கே சேதமான இணைப்பு சாலையால் அவதி

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி பகுதியில் இரண்டு நாட்களுக்கு முன் கனமழை பெய்தது. அன்றைய தினம், கும்மிடிப்பூண்டியில் 8 செ.மீ., மழை பதிவானது.

ஒரு நாள் பெய்த கனமழையால், சென்னை -- கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், கும்மிடிப்பூண்டி தாசில்தார் அலுவலகம், சிப்காட், கன்னியம்மன் கோவில், பெத்திக்குப்பம், எளாவூர், கவரைப்பேட்டை ஆகிய பகுதிகளில் உள்ள இணைப்பு சாலைகள் சேதமடைந்து குண்டும் குழியுமாக மாறியது.

அப்பகுதியில் மழைநீர் வடிந்து செல்ல வழியில்லாததால், சாலையில் மழைநீர் தேங்கிய இடங்களில், பெரிய அளவிலான பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. பள்ளம் இருப்பது தெரியாமல் செல்லும் வாகனங்கள், விபத்தில் சிக்குகின்றன.

எனவே, சேதமான இணைப்பு சாலைகளை சீரமைத்து, அப்பகுதிகளில் மழைநீர் வடிந்து செல்லும் வசதியை ஏற்படுத்த வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement