திருவள்ளூரில் சுத்திகரிக்காமல் வெளியேற்றப்படும் கழிவுநீரால்...துர்நாற்றம்;நவீன சுத்திகரிப்பு மைய பணியை துரிதப்படுத்த கலெக்டர் உத்தரவு

திருவள்ளூர்:திருவள்ளூர் நகராட்சி கழிவுநீர் சுத்திகரிப்பு மையத்தில் இருந்து, சுத்திகரிக்காமல் வெளியேற்றப்படும் கழிவுநீரால், துர்நாற்றம் ஏற்பட்டு, பகுதிவாசிகளை அவதிக்குள்ளாக்கி உள்ளது. தற்போது, 10.48 கோடி ரூபாய் மதிப்பில் நடைபெற்று வரும் நவீன சுத்திகரிப்பு பணியை விரைந்து முடிக்க கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.


திருவள்ளூர் நகராட்சியில், கடந்த 2008ம் ஆண்டு பாதாள சாக்கடை திட்டப்பணி, 55 கோடி ரூபாய் மதிப்பில் துவங்கப்பட்டது. அப்போது, 11 ஆயிரத்து 907 கட்டடங்கள் இருந்தன.

அதற்கேற்ற வகையில், நகரில் 86.97 கி.மீ., குழாய் பதிக்கப்பட்டது. இப்பணி, 2013 முதல் நிறைவடைந்த பின், தற்போது செயல்பாட்டில் உள்ளது.

நகராட்சியில் இதுவரை, 7,000 வீடுகளுக்கு மேல் பாதாள சாக்கடை இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது. வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர், நகரின் நான்கு இடங்களில் சேகரிக்கப்படுகிறது.

அங்கிருந்து, தேவி மீனாட்சி நகரில் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு மையத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு, சுத்திகரிப்பு செய்யப்பட்ட நீர், புட்லுார் ஏரியில் நேரடியாக வெளியேற்றப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கழிவுநீர் சுத்திகரிப்பு மையத்தில் உள்ள இயந்திரம் முறையாக வேலை செய்யாததால், சுத்திகரிக்கப்படாமல் கழிவுநீர் வெளியேறி வருகிறது. தேவா நகர், தேவி மீனாட்சி நகர் மற்றும் பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலைச் சுற்றியுள்ள குடியிருப்பு பகுதிகளில், கழிவுநீர் குளம்போல் தேங்கி உள்ளது.

இதன் காரணமாக, அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும், புட்லுார் ஏரி நீர் மாசடைந்து, துர்நாற்றம் வீசுவதால், புட்லுார் கிராமவாசிகளும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

புட்லுார் - திருவள்ளூர் இடையில் ரயிலில் பயணம் செய்வோரும், ஏரியில் இருந்து எழும் துர்நாற்றத்தால் சிரமப்படுகின்றனர். மேலும், ஜெயா நகர், ஜவஹர் நகர், பெரியகுப்பம், எம்.ஜி.ஆர்., நகர் உட்பட, நகரின் பல்வேறு இடங்களிலும் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு, கழிவு நீர் சாலையில் குளம் போல் தேங்கி வருகிறது.

இந்த நிலையில், சுத்திகரிப்பு மையத்திற்கு கொண்டு வரப்படும் கழிவுநீரை, சுத்தமான குடிநீராக மாற்றி, கூவம் ஆற்றில் விடப்படும் வகையில், 10.48 கோடி ரூபாய் மதிப்பில், நவீன சுத்திகரிப்பு மையம் அமைக்கும் பணி, 2023 பிப்., மாதம் துவங்கியது.

ஏற்கனவே உள்ள சுத்திகரிப்பு மையம் அருகே இடம் தேர்வு செய்யப்பட்டு, அருகிலிருந்த 17 ஆக்கிரமிப்பு கட்டடங்கள் அகற்றப்பட்டன. ஆனால், இரண்டு ஆண்டுகளாக நடைபெறாமல் முடங்கியது.

இதைத் தொடர்ந்து, தமிழக அரசு ஒப்பந்தத்தை ரத்து செய்து, மறு ஒப்பந்தம் நிறைவேற்றியது. இதைத் தொடர்ந்து, கடந்த மார்ச் முதல், மீண்டும் நவீன கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

இந்த பணியை கலெக்டர் பிரதாப் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பணி தொடர்பாக, நகராட்சி அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டார்.

பின், ''கட்டுமான பணியை செப்.,க்குள் முடிக்க வேண்டும். தவறினால், ஒப்பந்ததாரர் 'பிளாக் லிஸ்ட்'டில் வைக்கப்படுவார். இதை நகராட்சி கமிஷனர் முறையாக கடைப்பிடிக்க வேண்டும்.

''மேலும், கழிவுநீர் மையத்தில் இருந்து எழும் துர்நாற்றத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

கழிவுநீர் சுத்திகரிப்பதற்கு

மண்ணுயிரி தொழில்நுட்பம்மண்ணுயிரி தொழில்நுட்பத்தில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் அமைக்கப்பட்டு வருகிறது. இதனால், நுண்ணுயிரிகள், கழிவுநீரில் உள்ள கரிம மாசுக்கள் நீக்கப்படும். இது, சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காது.இந்த முறையில் கழிவுநீரை பாதுகாப்பான முறையில் சுத்திகரித்து, நிலம் மற்றும் நீராதாரங்களை மாசுபடுவதை தடுக்கிறது. இயற்கை முறையில் சுத்திகரிப்பு செய்வதால், செலவு குறைவாக இருக்கும். மேலும், சுத்திகரிக்கப்பட்ட பின் நன்னீராக புட்லுார் ஏரியில் விடப்பட உள்ளது. அதன்பின், ஏரி நீரும் மாசடையாது என, நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement