தோட்டத்து வீடுகளில் தொடரும் கொலைகள் பின்னணியில் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் *சந்தேகம் கிளப்புகிறார் வானதி

1

திருப்பூர்: திருப்பூரில் பா.ஜ., தேசிய மகளிர் அணி தலைவர் வானதி அளித்த பேட்டி:

மத்திய அரசு திட்டங்களால், சுயதொழில் துவங்குபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதிலும், தமிழகம் கடந்த 10 ஆண்டுகளில், 5 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான நலன்களை பெற்றுள்ளது.

ஆதிச்சநல்லுார், கீழடியை விட தொன்மையான இடம். அங்கு மத்திய அரசு தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறது. மத்திய அரசை குறை சொல்வதற்கு எதுவும் இல்லை என்ற நிலையில், கீழடியை வைத்து குறை சொல்கின்றனர். தி.மு.க., - கம்யூ., கட்சிகள் இதே வேலையை தொடர்ந்து செய்கின்றன.

தேசிய கட்சியில், தேசிய தலைமை எடுக்கும் முடிவைத்தான், அடிமட்ட தொண்டர் வரை பின்பற்ற வேண்டும். தமிழகத்தில் அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி குறித்து அறிவித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, 'தமிழத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அ.தி.மு.க., தலைமை ஏற்கும்' என கூறினார். ஆனால், தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை, 'வரும் 2026-ல், தமிழகத்தில் பா.ஜ., ஆட்சி மலரும்' என சொல்லி வருவது, அவருடைய தனிப்பட்ட கருத்து.

தமிழகத்தின் கொங்கு பகுதிகளில் உள்ள தோட்டத்து வீடுகளில் நடைபெறும் கொலை சம்பவங்களுக்கு ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் பின்ன ணியில் உள்ளதா என சந்தேகம் உள்ளது. நிலத்தை விற்பனை செய்யும் அவசியம் இல்லாத நிலையில், ரியல் எஸ்டேட் மாபியா கும்பல், இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதாக சந்தேகம் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

குப்பைக்கிடங்காக தமிழகம்

திருப்பூர் மாநகராட்சி பகுதியில், குப்பை அகற்றுவதில் மோசமான நிலை உள்ளது. கோவையில் தான், இந்த நிலை என நினைத்தேன். ஆனால், திருப்பூரில் அதைவிட மோசமான நிலை உள்ளது. கழிவுகளை அகற்றுவதில் அறிவியல்பூர்வமாக அணுகுவதில் தமிழகம் தோல்வி அடைந்துள்ளது. பல்வேறு அமைப்புகள் புதிய தொழில்நுட்பத்துடன் குப்பைகளை அகற்ற முன் வந்தாலும், தமிழகத்தை தி.மு.க., அரசு இன்னும் குப்பை கிடங்காகவே வைத்துள்ளது.-வானதி, பா.ஜ., தேசிய மகளிர் அணி தலைவர்

Advertisement