'கூட்டணி கட்சிகளுக்கு பழனிசாமியே சீட் ஒதுக்குவார்'

சேலம்: சேலத்தில் அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியை பா.ஜ., மாநில துணைத்தலைவர் ராமலிங்கம் சந்தித்து, முருக பக்தர்கள் மாநாடுக்கு அழைப்பு விடுத்தார்.

பின், அவர் அளித்த பேட்டி:

தமிழகத்தின் மிகப்பெரிய திட்டம் 'நடந்தாய் வாழி காவிரி'. இத்திட்ட மொத்த மதிப்பீடு, 11,900 கோடி ரூபாய்.

அதில் முதற்கட்டமாக, 990 கோடி ரூபாய் நிதியை, மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இத்திட்டத்துக்கு முதலில் கோரிக்கை வைத்த, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமிக்கு, விவசாயி சங்கங்கள் சார்பில் நன்றி தெரிவிக்கிறேன்.

இதுபோன்ற திட்டங்களை முன்னெடுத்த உண்மையான விவசாயிகளை, பச்சைத்துண்டு போட்டு முதல்வர் ஸ்டாலின் ஏமாற்றுகிறார். மேட்டூர் அணை திறந்தும் சரிவர துார்வாராததால், கடைமடை வரை தண்ணீர் செல்ல முடியாத நிலை உள்ளது.

தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர் பழனிசாமி தான். அவர்தான், கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கு, எத்தனை 'சீட்' ஒதுக்குவது என்பதை முடிவு செய்வார். தி.மு.க., அரசை விரட்டி அடித்து, தமிழக முதல்வராக பழனிசாமியை ஆக்கியே தீருவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement