ஆறுமுக சுவாமி கோவில் வளாகத்தில் யானை நினைவு மண்டப பணி விறுவிறு

திருத்தணி:திருத்தணி முருகன் கோவிலில், 'வள்ளி' என்ற யானை வளர்க்கப்பட்டு வந்தது. கடந்த 2010ம் ஆண்டு வள்ளி உடல்நலக் குறைவால் உயிரிழந்தது. இதையடுத்து கோவில் நிர்வாகம், திருத்தணி நந்தியாற்றின் கரையோரம் உள்ள முருகன் கோவிலின் உபகோவிலான ஆறுமுக சுவாமி கோவில் வளாகத்தில், இறந்த யானையின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

தொடர்ந்து, இறந்த யானையின் நினைவாக மண்டபம் கட்டுவதற்கு கோவில் நிர்வாகம் தீர்மானித்து, இரண்டரை ஆண்டுகளுக்கு முன், 54 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் துவக்கப்பட்டன.

யானை மண்டபம் 300 சதுரடியில் அடித்தளம் அமைத்து, கடந்தாண்டு நவம்பர் 21ம் தேதி யானை சிலை மண்டப அடித்தளம் மீது வைத்து பிரதிஷ்டை செய்யப்பட்டது. தற்போது, நினைவு மண்டபம் கட்டும் பணி துரித வேகத்தில் நடந்து வருகிறது.

இதுகுறித்து திருத்தணி கோவில் அதிகாரி கூறியதாவது:

ஆறுமுக சுவாமி கோவில் வளாகத்தில், 12 லட்சம் ரூபாய் மதிப்பில், 8 அடி நீளம், 6 அடி உயரம், 4 அடி அகலம் கொண்ட யானை கற்சிலை, நவ., 21ம் தேதி பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்த யானை சிலை, சென்னை மண்ணடியைச் சேர்ந்த தொழிலதிபர் கிரிதரன் வழங்கினார்.

யானைக்கு நினைவு கல்மண்டபம் கட்டும் பணிகள் துரித வேகத்தில் நடந்து வருகிறது. இன்னும் ஒரு மாதத்தில் மண்டபம் திறக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement