என்.எஸ்.இ., மதிப்பீட்டில் அதானி கிரீன் எனர்ஜி முதலிடம்

புதுடில்லி:என்.எஸ்.இ.,யின் மின் துறைக்கான இ.எஸ்.ஜி., மதிப்பீடுகளில் அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம் அதிக மதிப்பெண் பெற்று முதலிடத்தில் உள்ளதாக, பங்கு சந்தை இணையதளத்தில் பகிரப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

என்.எஸ்.இ., எனப்படும் தேசிய பங்குச்சந்தையின் ஒரு பிரிவான, என்.எஸ்.இ., நிலைத்தன்மை மதிப்பீடுகள் மற்றும் பகுப்பாய்வு நிறுவனத்தின் வாயிலாக மின்சாரத்துறை பயன்பாடுகள் பிரிவில் இ.எஸ்.ஜி., எனப்படும் சுற்றுச்சூழல், சமூக பொறுப்பு மற்றும் நிர்வாக நடைமுறைகளுக்கான மதிப்பீடுகளில் 74 புள்ளிகளுடன் அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம் முதலிடத்தில் உள்ளது.

மேலும், என்.எஸ்.இ.,யில் வருவாய் அடிப்படையில் பட்டியலிடப்படும் முதல் 100 நிறுவனங்களுக்கான மதிப்பீடுகளில், முதல் ஐந்து நிறுவனங்களில் ஒன்றாக, அதானி கிரீன் எனர்ஜி மாறியுள்ளது.

இம்மாத துவக்கத்தில், என்.எஸ்.இ., வலைதள பக்கத்தில் பதிவேற்றப்பட்ட விபரங்களின்படி, வர்த்தக துறையில் அதானி எண்டர்பிரைசஸ் 63 புள்ளிகளையும், அதானி துறைமுகங்கள் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலம் 69 புள்ளிகளையும், அதானி பவர் 63 புள்ளிகளையும், அதானி எனர்ஜி சொல்யூஷன்ஸ் 67 புள்ளிகளையும் பெற்றுள்ளன.

Advertisement