குன்றத்துாரில் நெரிசலை குறைக்க ஒரு வழி பாதையாக மாற்றம்

குன்றத்துார்:பூந்தமல்லி, ஸ்ரீபெரும்புதுார், போரூர், பல்லாவரம் ஆகிய நான்கு பகுதிகளுக்கு செல்லும் சாலைகள் சந்திக்கும் இடமாக குன்றத்துார் நகராட்சி உள்ளது.

தவிர, குன்றத்துார் முருகன் கோவிலுக்கு விடுமுறை மற்றும் விஷேச நாட்களில், ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

முகூர்த்த நாட்களில் குன்றத்துார் முருகன் கோவிலில் 50க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடப்பதால், ஒரே நேரத்தில் குன்றத்துார் நகரத்திற்குள் வரும் வாகனங்களால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இதையடுத்து, நெரிசலை குறைக்க, ஒரு வழிப்பாதை போக்குவரத்து விதிமுறைகளை, தாம்பரம் மாநகர காவல் துறை சார்பில், நேற்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.

அதன் விபரம்:

 பூந்தமல்லியில் இருந்து குன்றத்துார் பேருந்து நிலையம் மற்றும் பல்லாவரம் செல்லும் வாகனங்கள், சாந்தி ஜூவல்லர்ஸில் இடதுபுறம் திரும்பி அம்மன் கோவில் சாலை வழியாக சென்று, வலதுபுறம் திரும்பி, மீண்டும் இடதுபுறம் திரும்பி, பேருந்து நிலையத்திற்கு செல்ல வேணடும்.

பல்லாவரம் செல்லும் வாகனங்கள், மின் வாரிய அலுவலகம் அருகே இடதுபுறம் திரும்ப வேண்டும்.

 பல்லாவரத்தில் இருந்து குன்றத்துார் செல்லும் வாகனங்கள், தேரடி அருகே இடதுபுறம் திரும்பி, பேருந்து நிலையம் செல்ல வேண்டும்.

 பல்லாவரத்தில் இருந்து பூந்தமல்லி மற்றும் போரூர் செல்லும் வாகனங்கள், தேரடி அருகே வலதுபுறம் திரும்பி, பஜார் சாலை, கொல்லச்சேரி வழியாக, பூந்தமல்லி மற்றும் போரூர் செல்ல வேண்டும்.

 குன்றத்துார் பேருந்து நிலையத்தில் இருந்து பல்லாவரம் செல்லும் வாகனங்கள் தேரடி சாலை, பஜார் சாலை வழியாக சென்று, சாந்தி ஜூவல்லர்ஸ் அருகே வலதுபுறம் திரும்பி, அம்மன் கோவில் சாலை வழியாக சென்று, மின் வாரிய அலுவலகம் அருகே, இடதுபுறம் திரும்ப வேண்டும்.

Advertisement