சென்னை - பெங்களூரு சாலை பணி ஒப்பந்த ஊழியர்கள் புறக்கணிப்பு

காஞ்சிபுரம்:சென்னையில் இருந்து பெங்களூரு வரை, தங்க நாற்கர சாலை உள்ளது. இதன் வழியாக, சென்னையில் இருந்து பெங்களூரு செல்ல, ஏழு மணி நேரம் பயணம் செய்ய வேண்டும்.

பயண நேரத்தை குறைக்கும் பொருட்டு, ஸ்ரீபெரும்புதுாரில் இருந்து சுங்குவார்சத்திரம், கோவிந்தவாடி, பாணாவரம், ராணிப்பேட்டை, ஒஸ்கேட்டே வழியாக பெங்களூருக்கு செல்வதற்கு, அதிவிரைவு சாலை அமைக்கப்பட்டு வருகிறது.

இந்த சாலை அமைக்கப்பட்டால், சென்னையில் இருந்து நான்கு மணி நேரத்தில், பெங்களூரை அடையலாம். இந்த சாலை பணி 7,406 கோடி ரூபாயில் 2022ல் துவங்கி நடந்து வருகிறது.

சித்துார் - ராணிப்பேட்டை வரை; ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் - காஞ்சிபுரம் வரை; காஞ்சிபுரம் - திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் வரையில், 105 கி.மீ., துாரம் சாலை போடும் பணி நடந்து வருகிறது. மேலும், 76.26 கி.மீ., துாரம் சாலை போடும் பணிகள் நிறைவு பெற்றுள்ளன.

இதில், சோளிங்கர் - காஞ்சிபுரம் வரையிலான 25.5 கி.மீட்டரில் 11.25 கி.மீட்டருக்கு மட்டுமே பணி முடிந்துள்ளது. இதில், ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி ஒன்றியம், மகேந்திரவாடி, உளியநல்லுார்; காஞ்சிபுரம் மாவட்ட கோவிந்தவாடி, காட்டுப்பட்டூர் ஆகிய ஏரிகளில் பில்லர் போடும் பணி நிறைவு பெற்றுள்ளது. அவற்றை இணைக்கும் பணி முடியவில்லை.

இந்நிலையில், மேற்கண்ட வழித்தடத்தில் பணிக்கு ஒப்பந்த எடுத்த நிறுவனம், நிதி நெருக்கடியில் சிக்கி உள்ளதால் ஊழியர்களுக்கு நான்கு மாதங்களாக சம்பளம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால், கனரக வாகன ஓட்டுனர்கள், கட்டுமான தொழிலாளர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள் உள்ளிட்ட பலர், தற்போது வேலையை புறக்கணித்து வருகின்றனர். இதுகுறித்து, ஒப்பந்த நிறுவனத்தின் தொழிலாளர்கள், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகத்திடம் முறையிட்டுள்ளனர்.

மகேந்திரவாடியில் அதிவிரைவு சாலை அமைக்கும் திட்ட பணியை புறக்கணித்த தனியார் ஒப்பந்த தொழிலாளர்கள் கூறியதாவது:

பீஹார், மத்திய பிரதேசம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, குடும்பங்களை பிரிந்துவந்து, சாலை விரிவாக்க பணிகளை செய்து வருகிறோம். மாதந்திர ஊதியத்தை நான்கு மாதங்களாக தராததால், மிகவும் சிரமப்படுகிறோம்.

ஒப்பந்தம் எடுத்த நிறுவன அதிகாரிகள், விரைவில் ஊதியம் வழங்கப்படும் என எங்களை சமாதானப்படுத்தி வருகின்றனர். அதனால், எப்போது வழங்கப்படுகிறதோ அப்போது செய்யலாம் என, வேலை புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

சம்பந்தப்பட்ட ஒப்பந்த நிறுவனத்தினரை தொடர்பு கொண்டபோது, அவர்கள் மொபைல் போன் அழைப்பை ஏற்கவில்லை.

எங்களுக்கு தெரியாது

ஒப்பந்த நிறுவனத்திற்கு, செய்த வேலைகளுக்கு ஏற்ப, தேசிய நெடுஞ்சாலை துறை ஆணையம் பணம் விடுவித்துள்ளது. ஒப்பந்த நிறுவனம், தொழிலாளர்களுகளுக்கு ஊதியம் வழங்காதது குறித்து எங்களுக்கு ஒன்றும் தெரியாது.

சாலை திட்ட அதிகாரிகள்,

சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை

Advertisement