மின் தடைக்கு பொறுப்பேற்காத அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு

சோழிங்கநல்லுார்:சோழிங்கநல்லுார் மண்டல குழுக்கூட்டம், மண்டல அதிகாரி தணிகைவேல் முன்னிலையில், அதன் தலைவர் மதியழகன் தலைமையில் நடந்தது.

இதில் கவுன்சிலர்கள் பேசியதாவது:

வார்டு 195, தி.மு.க., ஏகாம்பரம்: ஓ.எம்.ஆர்., தலைமைச் செயலகம் குடியிருப்பு, குமரன்குடில் நகர், வி.பி.ஜி., அவென்யூ உள்ளிட்ட பகுதியில், தினமும் ஐந்து மணி நேரம் மின் தடை ஏற்படுகிறது.

அதிகாரிகளை தொடர்பு கொண்டால், பதில் கூற மொபைல் போனை எடுப்பதில்லை. அதிகாரிகள் இப்படி செயல்பட்டால், மக்களுக்கு யார் பதில் கூறுவது.

சாலை துண்டிப்பு கட்டணம் செலுத்தாமல், கழிவுநீர் குழாய் பதிக்க தோண்டிய சாலைகளை சீரமைக்க முடியவில்லை.

வார்டு 194, தி.மு.க., விமலா கர்ணா:
கடந்த மாதம் கூட்டத்தில் பேசிய எந்த பணியும் செய்து தரவில்லை. ஈஞ்சம்பாக்கத்தில் பூஜை போட்டு பல மாதங்களாகியும் வடிகால்வாய் பணி துவங்கவில்லை.

இதனால் மழையின்போது பாதிப்பு ஏற்படும். இ.சி.ஆரில் அடிக்கடி ஏற்படும் மின் தடைக்கு அதிகாரிகள் உடனுக்குடன் தீர்வு காண்பதில்லை.

வார்டு 196, அ.தி.மு.க., அஸ்வினி கர்ணா: வடிகால்வாய் பணிக்காக பள்ளம் எடுத்த சாலைகளில், பணிகளை விரைந்து முடிக்காததால், போக்குவரத்து பாதிக்கிறது.

கண்ணகி நகரில் மின் தடை குறித்து அதிகாரியிடம் கேட்டால், முறையான பதில் தருவதில்லை. அலட்சியமாக செயல்படுகின்றனர்.

வார்டு 197, அ.தி.மு.க., மேனகா சங்கர்:
அக்கரையில் 10 ஆண்டுகளாக செயல்படாத கழிவு நீரேற்று நிலையத்தை சீரமைக்க வேண்டும்.

வார்டு 200, தி.மு.க., முருகேசன்: ஓ.எம்.ஆர்., - குமரன் நகர் சந்திப்பில் சாலை பள்ளத்தால், அடிக்கடி விபத்து நடக்கிறது. செம்மஞ்சேரி கழிவுநீர் திட்ட பணிகளை விரைந்து முடித்து, சாலையை சீரமைக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் பேசினர்.

மேற்கண்ட குற்றச்சாட்டுக்களுக்கு அந்தந்த துறை அதிகாரிகள் பதில் கூறினர். மின் வாரிய அதிகாரிகள் கூறிய பதில் மீது, கவுன்சிலர்கள் அதிருப்தி அடைந்தனர்.

தொடர்ந்து, சாலை சீரமைப்பு, வடிகால் துார் வாருவது, கட்டடங்கள், பூங்கா பராமரிப்பு உள்ளிட்ட பணிகளுக்காக, 75 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement