மனுக்களுக்கு 100 சதவீதம் தீர்வு கரூர் எம்.எல்.ஏ., பெருமிதம்

கரூர்: கரூர், கொங்கு திருமண மண்டபத்தில், மாவட்ட தி.மு.க., சார்பில் கல்வி மற்றும் மருத்துவ நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏ.,மான செந்தில்பாலாஜி தலைமை வகித்து, உதவிகளை வழங்கி பேசியதாவது:



கரூர் எம்.எல்.ஏ., அலுவலகம், தி.மு.க., அலுவலகத்தில் கல்வி, மருத்துவ உள்பட பல்வேறு கோரிக்கை மனுக்கள் வழங்கப்படுகின்றன. பல கோரிக்கை மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு உதவித்தொகை வழங்கப்பட்ட நிலையில் மீதமிருந்த, 607 மனுக்களுக்கு, 1.59 கோடி ரூபாய் நிதி உதவி வழங்கப்படுகிறது. மாவட்டத்தில் பல்வேறு அரசியல் இயக்கங்கள் இருக்கலாம். வேறு எந்த கட்சி அலுவலகத்திற்கு சென்று மனு கொடுத்தால் தீர்வு காணப்படும் நிலை இல்லை. தி.மு.க., அலுவலகம், எம்.எல்.ஏ., அலுவலகத்தில் கொடுக்கப்பட்ட மனுக்களுக்கு, 100 சதவீதம் தீர்வு கிடைக்கும். இதற்கு முன், 5 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தவர்கள் என்ன செய்தனர் என்று சிந்தித்து பார்க்க வேண்டும்.



இவ்வாறு, அவர், பேசினார்.
குளித்தலை எம்.எல்.ஏ., மாணிக்கம், அரவக்குறிச்சி எம்.எல்.ஏ., இளங்கோ, கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ., சிவகாமசுந்தரி, மாநகர பகுதி செயலாளர்கள் ராஜா, குமார், ஜோதிபாசு, ஒன்றிய செயலாளர்கள் வேலுச்சாமி, முத்துக்குமார், பாஸ்கரன் உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement