மும்பையை திக்குமுக்காட வைத்த கனமழை; ரயில், பஸ் சேவை முற்றிலும் முடக்கம்

மும்பை: மும்பை நகரில் 24 மணிநேரத்தில் 100 மி.மீ, மழை பெய்துள்ளது. பஸ், ரயில் சேவை பாதிக்கப்பட்டதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
மும்பையில் நேற்று முதல் பரவலாக பெய்யத் தொடங்கிய மழை, இன்று அதிகாலை முதல் வெளுத்து வாங்கியது. இடைவிடாத கனமழை எதிரொலியாக நகரின் பல பகுதிகள் வெள்ளக்காடானது.
தாழ்வான பகுதிகளில் மழைநீர் புகுந்ததால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாத சூழல் நிலவியது. சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் பஸ்கள் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கின.
கடந்த 24 மணி நேரத்தின்படி நகரில் 100 மி.மீ., மழை பதிவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறி இருக்கிறது. நகரின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் முறையே 58 மற்றும் 75 மி.மீ.மழை பெய்துள்ளது.
தொடர் மழை காரணமாக, மும்பை நகருக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தானே, பால்கர், ராய்கட் ஆகிய பகுதிகளில் ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. மழையினால், மும்பையில் புறநகர் ரயில் மற்றும் பஸ் சேவை முற்றிலும் முடங்கி உள்ளது. மெட்ரோ ரயில் சேவையிலும் பாதிப்பு காணப்பட்டது.
இதனிடையே, மழையின் தாக்கம் காரணமாக, இண்டிகோ விமான நிறுவனம் அதன் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் மும்பை நகரின் பல பகுதிகளில் தொடர் மழை நீடிக்கிறது. சாலை போக்குவரத்திலும் பாதிப்பு இருப்பதை காண முடிகிறது. எனவே, பயணிகள் தங்கள் விமானத்தின் புறப்பாடு மற்றும் வருகை தொடர்பான தகவல்களை முன்னரே அறிந்து கொண்டு, அதற்கேற்ப செயல்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.

