டில்லியில் பிரபல அடுக்குமாடி குடியிருப்பு அருகே சம்பவம்; சாய்ந்து விழுந்த 100 அடி செல்போன் கோபுரம்

புதுடில்லி; டில்லியில் 100 அடி உயரம் கொண்ட செல்போன் கோபரம் இடிந்து விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.



தெற்கு டில்லியில் உள்ளது சப்தர்ஜங் பகுதி. இங்குள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் நுழைவுவாயில் அருகே 100 அடி உயரம் கொண்ட செல்போன் கோபுரம் உள்ளது. ஒருமாதம் முன்பு தான் இந்த கோபுரத்தை டில்லி நகராட்சி நிர்வாகம் அமைத்தது.


நேற்றிரவு முழுவதும் பெய்த திடீர் மழையால் இந்த செல்போன் கோபுரம் திடீரென அதிகாலை பலத்த சத்தத்துடன் இடிந்து விழுந்தது.


இதனால் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தோர் அதிர்ச்சி அடைந்தனர். இதில் அங்கிருந்த மின்கம்பங்கள், மரங்கள் சேதம் அடைந்தது. நல்வாய்ப்பாக அதிகாலை நேரம் என்பதால் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை.


இதுகுறித்து டில்லி நகராட்சி கமிஷனர் அஷ்வினி குமார் கூறியதாவது; கட்டுமான நிறுவனரும், தொலைதொடர்பு ஏஜென்சியும் தான் இந்த சம்பவத்திற்கு பொறுப்பு. அதற்கான விதிகளும் உள்ளன என்றார்.


சம்பவம் குறித்து டில்லி போலீசார் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளனர். அதில் கூறப்பட்டு உள்ளதாவது:


செல்போன் கோபுரம் சாலையின் குறுக்கே விழுந்துள்ளது. 100 அடி நீளம் கொண்டது. இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் இல்லை. டில்லி நகராட்சியின் உத்தரவைத் தொடர்ந்து இந்த கோபுரம் அமைக்கப்பட்டது. சாய்ந்த கோபுரத்தை அதன் பணியாளர்கள் சிறு,சிறு பாகங்களாக கழற்றி விட்டனர். அனைத்தும் அங்கு சரி செய்யப்பட்டு விட்டது.


இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement