சிறுத்தை தாக்கி 6 ஆடுகள் பலி அச்சத்திலுள்ள கிராம மக்கள்

வேலுார், குடியாத்தம் அருகே, சிறுத்தை தாக்கி, 6 ஆடுகள் பலியானது. மீண்டும் சிறுத்தை நடமாட்டத்தால், கிராம மக்கள் அச்சத்தில்
உள்ளனர்.
வேலுார் மாவட்டம், குடியாத்தம் அருகே, வனத்தை ஒட்டிய வீரிச்செட்டிபல்லி கிராமத்தை சேர்ந்தவர் மூர்த்தி, 40. ஆடு வளர்க்கும் தொழிலாளி. இவரது, 12 ஆடுகளை, நேற்று முன்தினம் இரவு, அவரது விவசாய நிலத்திலுள்ள கொட்டகையில் அடைத்து வைத்திருந்தார். நேற்று காலை ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டி செல்ல சென்று பார்த்தபோது, அதில், 6 ஆடுகள் சிறுத்தை கடித்து இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். குடியாத்தம் வனத்துறையினர் சம்பவ இடம் சென்று பார்த்தபோது, ஆடுகள் சிறுத்தை கடித்து பலியானதை உறுதிப்படுத்தினர். பின்னர், பலியான ஆடுகளை அங்கேயே உடற்கூறு ஆய்வு செய்து புதைத்தனர்.
அப்போது, குடியாத்தம் வனச்சரக அலுவலர் பிரதீப்குமார் கூறுகையில், ''வனத்தை ஒட்டிய பகுதியிலுள்ள விவசாயிகள் தங்களின் கால்நடைகளை அடர்ந்த வனப்
பகுதிக்கு மேய்ச்சலுக்கு கொண்டு செல்ல வேண்டாம். மாலையில் வனத்தை ஒட்டியபடி செல்ல வேண்டாம்,'' என்றார்.
அப்பகுதியில் மீண்டும் சிறுத்தை நடமாட்டத்தால், விவசாயிகளும், கிராம மக்களும் அச்சமடைந்துள்ளனர்.

Advertisement