'பா.ம.க., குழப்பத்திற்கு தி.மு.க.,வே காரணம்' காஞ்சியில் அன்புமணி ஆவேச பேச்சு

காஞ்சிபுரம்: பா.ம.க., சார்பில், மாவட்ட வாரியாக பொதுக்குழு கூட்டம், நடத்தப்பட்டு வருகிறது. திருவள்ளூர் மாவட்டத்தை தொடர்ந்து, காஞ்சிபுரத்தில் அன்புமணி தலைமையில் நேற்று பொதுக்குழு கூட்டம் நடந்தது.

கூட்டத்தில் அன்புமணி பேசியதாவது:



முதல்வர் ஸ்டாலினுக்கு தமிழகத்தில் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. அதை மறைக்க, நம்மை போன்ற கட்சிகளில் குழப்பம் செய்து, அவற்றை பலவீனபடுத்த தி.மு.க., முயற்சி செய்கிறது. அவர்கள் வெற்றி பெற முடியாது.



சூழ்ச்சியாளர்கள்
சமீபத்தில், மாமல்ல புரத்தில் மிகப் பெரிய மாநாடு நடத்தினோம். அனைத்து கட்சிகளும் வாயை பிளந்து பார்த்தனர். அதை பார்த்ததில் இருந்து தி.மு.க.,வுக்கு வயிற்றெரிச்சல் கூடிவிட்டது.



வன்னியர் சமூகத்திற்கு தி.மு.க., துரோகம் செய்தது என அந்த மாநாட்டில் பேசினேன். நான்கு ஆண்டுகள் நம்பவைத்து, வன்னிய சமுதாயத்திற்கு இட ஒதுக்கீடு தருகிறேன் என தி.மு.க., துரோகம் செய்தது.


பா.ம.க.,வில் நடக்கும் குழப்பத்திற்கு காரணம் அப்பா ராமதாசும் நானும் இல்லை; தி.மு.க., தான். நம்முடைய கட்சியிலும் சில சூழ்ச்சியாளர்கள் இருக்கின்றனர். அவர்கள் வாயிலாகத்தான் குழப்பம் விளைவிக்கப் பார்க்கிறது தி.மு.க., சூழ்ச்சியை களத்தில் உடைத்தெறிவோம்.


கட்சிக்கும், எனது சமுதாயத்துக்கும் நான் துரோகம் செய்தால், அதுவே என்னுடைய கடைசி நாளாக இருக்கும். கட்சியில் இருக்கும் சூழ்ச்சியாளர்கள், என்னைப் பற்றி ராமதாசிடம் ஏதோ சொல்கின்றனர். அதையும் அவர் நம்புகிறார்.


நான் எந்த தவறும் செய்யவில்லை. ஆனாலும், அப்பாவிடம் மன்னிப்பு கேட்கிறேன். காரணம், கட்சி ஒற்றுமையாக செயல்பட வேண்டும். அடுத்தகட்டத்துக்கு செல்ல வேண்டும்.


பா.ம.க., வழக்கறிஞரை துப்பாக்கியால் சுட்டுக் கொல்கின்றனர். இந்த கலாசாரம் அமெரிக்காவில்தான் உள்ளது.


காவல் துறையை சரியாக நிர்வகிக்காத தமிழக முதல்வரால்தான், இதெல்லாம் நடக்கிறது. முடியவில்லை என்றால், பதவியில் இருந்து இறங்குங்கள். இனிமேலும், நாசகார தி.மு.க., ஆட்சி இருக்கக்கூடாது. அதற்காகவே, வரும் ஜூலை மாதம் நடைபயணம் துவக்குகிறேன்.


மதுவுக்கு எதிராக இருந்த அண்ணாதுரை பிறந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஆறு மது ஆலைகளை தி.மு.க., நடத்துகிறது.

டாஸ்மாக் முறைகேடு



டாஸ்மாக்கில் 1,000 கோடி ரூபாய்க்கு முறைகேடு நடந்தது கண்டறியப்பட்டுள்ளது. பெரிய அளவில் ஆராய்ந்திருந்தால், பல ஆயிரம் கோடி ரூபாய்க்கான முறைகேடு கண்டறியப்பட்டிருக்கும்.

பாலாற்றில் தடுப்பணை கட்டினால், மணல் கொள்ளையடிக்க முடியாது என்பதாலேயே தடுப்பணை கட்டவில்லை.


நாம் போராடியதால், வேறு வழியின்றி மூன்று தடுப்பணைகள் கட்டினர். ஆட்சி அதிகாரம் நம் கையில் இருந்தால், பல தடுப்பணைகளை கட்டியிருப்போம்.



பரந்துாரில் தான் விமான நிலையம் அமைப்போம் என பிடிவாதம் பிடிக்கின்றனர். பரந்துாரை சுற்றி, ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தை வாங்கி வைத்துள்ளனர் தி.மு.க.,வினர். பரந்துார் விமான நிலையம் அமைப்பதன் வாயிலாக, பல ஆயிரம் கோடி ரூபாய் சம்பாதிக்க திட்டம் போட்டுள்ளனர். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement