கக்கனை கண்டுகொள்ளாத அரசு அதிகாரிகள் மராமத்துக்கு காத்திருக்குது மணிமண்டபம்

மேலுார் : தும்பைப்பட்டியில் கக்கன் மணிமண்டபத்தை பராமரிப்பு செய்யாமல், அதிகாரிகள் பெயரளவில் விழா கொண்டாடுவதாக புகார் எழுந்துள்ளது.

தும்பைப்பட்டியில் 1909 ஜூன் 18-ல் பிறந்த கக்கன் வெள்ளையனே வெளியேறு, ஆகஸ்டு புரட்சி உள்பட பல போராட்டங்களில் பங்கேற்றார். எம்.பி.,யாகவும், பொதுப்பணித்துறை, நிதித்துறை, கல்வி, அறநிலையத்துறை உள்பட பல துறைகளின் அமைச்சராக பதவி வகித்தார். அவரை கவுரவிக்கும் வகையில், தபால் தலை வெளியிடப்பட்டது.

மேலும் 2001ல் அரசு சார்பில் மணிமண்டபம் கட்டப்பட்டது. இங்கு அவரது பிறந்த, நினைவு நாட்களில் அரசு அதிகாரிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவர். இவ்வாறு பெயரளவில் விழா நடத்தும் அதிகாரிகள்மண்டபத்தை பராமரிப்பதில் அக்கறை காட்டுவதில்லை என்பது மக்களின் குற்றச்சாட்டு.

அப்பகுதி ராஜேஷ்வரன் கூறியதாவது:

மண்டபத்தை அதிகாரிகள் பராமரிக்காததால் கூரை, தரை சிதிலமடைந்துள்ளது. நுாலக கட்டடத்தினுள் மர வேர்கள் ஊடுருவி வெடிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் வழியே தண்ணீர் கசிவதால் கட்டடம் வலுவிழப்பதுடன், நுால்கள் வீணாகிறது. மின் இணைப்பு அறுந்து தொங்குகிறது. கழிப்பறை சிதிலமடைந்து பூட்டிக் கிடக்கிறது.

ஜன்னல் கண்ணாடிகள் உடைந்துள்ளன. கக்கன் சிலைக்கு மேல் உள்ள சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து கம்பிகள் துருப்பிடித்துள்ளன. அரசியல் தலைவர்களுடன் கக்கன் எடுத்த படங்களை புதுப்பிக்க அதிகாரிகள் எடுத்துச் சென்றனர். அதனை மீண்டும் வைக்கவில்லை.

நாளை (ஜூன் 18) பிறந்தநாள் கொண்டாட உள்ள நிலையில் மண்டபத்தை புதுப்பிக்க அதிகாரிகள் முன்வரவேண்டும் என்றார்.

Advertisement