காரியாபட்டி வடகரையில் சேதமான மேல்நிலை தொட்டியால் விபத்து அச்சம்

காரியாபட்டி : வடகரையில் மேல்நிலைத் தொட்டி சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளதால் அச்சத்தில் கிராமத்தினர் உள்ளனர். அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.

காரியாபட்டி வடகரையில் குடிநீர் சப்ளை செய்ய உள்ளூரில் ஆழ்துளை கிணறு அமைத்தனர். 20 ஆண்டுகளுக்கு முன் மேல்நிலைத் தொட்டி கட்டப்பட்டு, நீரேற்றி குடிநீர் சப்ளை செய்யப்பட்டது. நாளடைவில் கட்டடம் வலுவிழந்து, பில்லர்களில் விரிசல் ஏற்பட்டது. தண்ணீர் கசிவு ஏற்பட்டு, வீணாக வெளியேறியது. தொட்டியில் முழு கொள்ளளவில் தண்ணீர் ஏற்றும் போது அதிக பாரம் தாங்காமல் இடிந்து விழும் ஆபத்தான சூழ்நிலை இருந்தது.

விபத்து அச்சம் ஏற்பட்டதால், புதிய தொட்டி கட்டிய பின் பழைய தொட்டியை பயன்படுத்துவதை நிறுத்தினர். தற்போது பயன்பாடு இன்றி கிடப்பதுடன் சிமென்ட் பூச்சுகள் விழுகின்றன. கம்பிகள் வெளியே தெரிகின்றன. பலத்த காற்றுக்கு இடிந்து விழுமோ என்கிற அச்சத்தில் அக்கிராமத்தினர் உள்ளனர். விபத்திற்கு முன் மேல்நிலைத் தொட்டியை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அக்கிராமத்தினர் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement