பேரூராட்சி செலவின பட்டியலை மக்களிடம் வழங்கிய தலைவி

காரைக்குடி; பள்ளத்துார் பேரூராட்சியில் மாதந்தோறும் செலவினங்களை பட்டியலிட்டு மக்களிடம் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளதால் மக்கள் வரவேற்றுள்ளனர்.

பள்ளத்துார் பேரூராட்சியில் 15 வார்டுகளில் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்கு ஆண்டுதோறும்சொத்து வரி ரூ.47 லட்சம், தொழில் வரி ரூ.13 லட்சம், கடை வாடகை மற்றும் இதர வருவாய் ரூ.25.66 லட்சம், குடிநீர் வரி ரூ.13 லட்சம் வருகிறது.

பேரூராட்சியில் அரசு நிதியின் மூலம் புதிய சாலை அமைத்தல், மின்விளக்கு அமைத்தல், குடிநீர் குழாய் அமைத்தல் உட்பட பல்வேறு பணிகள் நடந்து வருகிறது. பொதுமக்கள் பேரூராட்சியின் வரவு செலவுகளை அறியும் விதமாக புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

மாதந்தோறும் பேரூராட்சியில் செலவினங்களை பட்டியலிட்டு மக்களிடம் கொண்டு சேர்க்கும் புதிய திட்டத்தை பேரூராட்சி தலைவி சாந்தி கொண்டு வந்துள்ளார்.

பள்ளத்துார் பேரூராட்சி தலைவி சாந்தி கூறுகையில், பேரூராட்சியின் வரவு செலவு வெளிப்படைத்தன்மையாக மக்களுக்கு தெரிய வேண்டும் என்பதற்காக இந்த புதிய முயற்சி தொடங்கப்பட்டுஉள்ளது. பேரூராட்சி மன்ற கூட்டம் மூலம் கவுன்சிலர்களுக்கு மட்டுமே செலவு கணக்குகள் வழங்கப்பட்ட வந்தது.

பொதுமக்களுக்கும் இந்த செலவு கணக்குகள் தெரிய வேண்டும் என்பதற்காக முதன்முறையாக இம்முயற்சி தொடங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் செலுத்தும் வரிப்பணம் முறையாக செலவிடப்படுகிறதா என்பதை மக்கள் அறிய வேண்டும். இதில் பொது மக்களுக்கு சந்தேகம் இருந்தால் நேரடியாக கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

Advertisement