நடிகர் மிதுன் சக்கரவர்த்தி பெயரை பயன்படுத்தி மோசடி: வட மாநில வாலிபர் கைது

ஊட்டி: ஊட்டியில், நடிகர் மிதுன் சக்கரவர்த்தி பெயரில் ஓட்டல் மேலாளருக்கு போலியாக மெசேஜ் அனுப்பி, 20 லட்சம் ரூபாய் மோசடி செய்த வழக்கில் வட மாநில வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேற்குவங்க மாநிலம் கோல்கத்தாவை சேர்ந்தவர், பிரபல பாலிவுட் நடிகர் மிதுன் சக்கரவர்த்தி. 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவருக்கு சொந்தமான, ஊட்டியில் உள்ள நட்சத்திர ஓட்டல் மேலாளரின் மொபைல் போனுக்கு, கடந்த ஜன., 13ம் தேதி 'வாட்ஸ் -அப்' செயலியில் குறுஞ்செய்தி வந்துள்ளது.
அதில், 'குன்னுாரில் முக்கிய விஷயமாக பணியில் இருக்கிறேன். நான் இருக்கும் இடத்தில் மொபைல் போன் சிக்னல் பிரச்னை உள்ளது. ஓட்டல் சம்பந்தமான வங்கி கணக்குகளில் எவ்வளவு பணம் உள்ளது,' என, குறிப்பிடப்பட்டிருந்தது.
உடனே பதில் அளித்த மேலாளர், 'ஓட்டலுக்கு சொந்தமான பல்வேறு வங்கி கணக்குகளில், 70 லட்சம், நிரந்தர வைப்புத் தொகையாக , 30 லட்சம் ரூபாய் உள்ளது,' என, கூறினார்.
அதில், 'முதல் கட்டமாக, 20 லட்சம் ரூபாய் உடனடியாக அனுப்பவும்,' என, 'வாட்ஸ்- அப்' செயலியில் வங்கி கணக்கு விவரங்களுடன் பதில் வந்திருக்கிறது.
இதை நம்பிய மேலாளர், வங்கி கணக்கில் இருந்து, 20 லட்சம் ரூபாயை ஆன்லைன் வாயிலாக அனுப்பி உள்ளார். அப்போது, 'நீங்கள் கூறியபடி, 20 லட்சம் ரூபாய் உங்கள் வங்கி கணக்குக்கு அனுப்பி விட்டேன்,' என, மேலாளர் தகவல் அனுப்பிய பின், சிறிது நேரத்தில் மோசடி நடந்தது அவருக்கு தெரியவந்தது. உடனே, நீலகிரி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். தொடர்ந்து, இன்ஸ்பெக்டர் பிரவீணா தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், இந்த சம்பவத்தில், தனது சகோதரியின் வங்கி கணக்கு விவரங்களை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்ட அரியானா மாநிலத்தை சேர்ந்த ரவீன்குமார்,35, என்பவரை, நேற்று முன்தினம் கைது செய்து அவரிடம் இருந்து, 6 லட்சம் ரூபாயை போலீசார் மீட்டனர். தொடர் விசாரணை நடந்து வருகிறது.
மேலும்
-
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை எப்படி இருக்கும்? வெளியானது 3டி வீடியோ!
-
முற்றியது போர்; ஈரானின் முக்கிய தளபதி அலி சட்மானியை கொன்றுவிட்டதாக இஸ்ரேல் அறிவிப்பு
-
நீலகிரிக்கு இன்று ஆரஞ்சு; சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
-
லண்டன் செல்ல இருந்த ஏர் இந்தியா விமானத்தில் கோளாறு: கடைசி நேரத்தில் ரத்து
-
மூதாட்டிக்கு பாலியல் தொல்லை; வாலிபரை சுட்டுப் பிடித்தது போலீஸ்!
-
மன்னிப்பு கேட்கும்படி கமலுக்கு உத்தரவிட முடியாது; சுப்ரீம் கோர்ட்