வருகிறது நான்கு நாள் டெஸ்ட் * ஐ.சி.சி., புதிய முடிவு

லண்டன்: வரும் 2027-29 டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் நான்கு நாள் கொண்ட டெஸ்ட் போட்டி அறிமுகம் ஆகிறது.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில் டெஸ்ட் போட்டி வளர்ச்சிக்கு உதவும் வகையில், இரு ஆண்டுக்கு ஒருமுறை உலக சாம்பியன்ஷிப் தொடர் நடத்தப்படுகிறது. இதுவரை முடிந்த 3 சீசனில் நியூசிலாந்து (2019-21), ஆஸ்திரேலியா (2021-23), தென் ஆப்ரிக்க (2023-2025) அணிகள் சாம்பியன் ஆகின.
தற்போது 2025-27 சீசன் துவங்கியுள்ளது. அடுத்து 2027-29 சீசனில் நான்கு நாள் மட்டும் கொண்ட டெஸ்ட் போட்டிகளை நடத்த ஐ.சி.சி., முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து 'தி கார்டியன்' பத்திரிகையில் வெளியான செய்தி:
இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் 5 நாள் கொண்ட டெஸ்ட் போட்டித் தொடரில் பங்கேற்கும். இதில் மாற்றம் இல்லை. ஆனால் ஜிம்பாப்வே, அயர்லாந்து போன்ற சிறிய அணிகள் ஐந்து நாள் கொண்ட போட்டியை நடத்த போதிய வசதியின்றி திணறுகின்றன. இதனால் ஒருநாள் குறைவாக, 4 நாள் கொண்ட டெஸ்ட் நடத்தும் பட்சத்தில், 3 போட்டி கொண்ட தொடரை, 3 வாரத்துக்கும் குறைவான நாளில் முடித்து விடலாம்.
அதேநேரம் 90 ஓவருக்குப் பதில், கூடுதலாக 8 ஓவர் சேர்த்து, தினமும் 98 ஓவர்கள் வீச வேண்டும். சமீபத்தில் லார்ட்சில் நடந்த பேச்சவார்த்தையில் இம்முடிவுக்கு, ஐ.சி.சி., தலைவர் ஜெய் ஷா ஆதரவு தெரிவித்துள்ளார்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2017ல் அனுமதி
டெஸ்ட் போட்டியை 4 நாள் நடத்த 2017ல் முதன் முறையாக ஐ.சி.சி., அனுமதி வழங்கியுள்ளது. இங்கிலாந்து அணி, சொந்தமண்ணில் ஜிம்பாப்வேயுடன் 4 நாள் மட்டும் விளையாடியது. அடுத்து 2019, 2023ல் அயர்லாந்துடன் இதுபோல மோதியது.

Advertisement