திருமண மண்டப மேலாளரை கொன்ற போதை நபர் கைது

திருச்சி,:திருச்சி மாவட்டம், முசிறி திருமுருகன் நகரை சேர்ந்தவர் சுப்பிரமணியன், 52; தனியார் திருமண மண்டப மேலாளர். இவர் நேற்று முன்தினம் இரவு, 9:00 மணிக்கு திருமண மண்டபத்தில் இருந்து வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.

வீட்டின் அருகே, அதே பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி கணேசன், 32, குடிபோதையில் நின்றுள்ளார். அவர், சுப்பிரமணியனிடம் போதையில் தகராறில் ஈடுபட்டார். இதுகுறித்து, போலீசில் புகார் தெரிவிக்க, போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்து, கணேசனை கண்டித்து அனுப்பினர்.

அதன் பின், தன் நண்பருடன், சுப்பிரமணியம் சாப்பிட சென்று விட்டு, மீண்டும் வீடு திரும்பியபோது, திருமுருகன் நகர் பஸ் ஸ்டாப்பில் நின்றிருந்த கணேசன், மீண்டும் வம்பிழுத்து, சுப்பிரமணியத்தை கத்தியால் குத்தி விட்டு தப்பியோடினார்.

திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி சுப்பிரமணியம் இறந்தார். முசிறி போலீசார் கணேசனை கைது செய்தனர்.

Advertisement