மணல் கடத்தியபோது பைக் மோதி வாலிபர் பலி

குளித்தலை, ;குளித்தலை அருகே, மணல் கடத்தி வந்த போது, இரு பைக்குகள் மோதிய விபத்தில் வாலிபர் பலியானார்.
குளித்தலை அடுத்த, நங்கவரம் மேல்நங்கவரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முத்துக்குமார், 27. இவர், தனக்கு சொந்தமான ஹீரோ ஸ்பிளண்டர் பைக்கிலும், நெய்தலுார் காலனி அண்ணா நகரை சேர்ந்த லோகநாதன், 27, பஜாஜ் பைக்கில் பனையூர் பகுதியிலும் மணல் கடத்துவது வழக்கம்.
இந்நிலையில் கடந்த, 14ம் தேதி அதிகாலை 2:00 மணியளவில் மாடுவிழுந்தான்பாறை, பெரியபனையூர் சாலையில், சேகர் தென்னைதோப்பு அருகில், காட்டுவாரி பகுதியில் இருந்து பைக்கில் மணலை கடத்தி முகப்பு விளக்கு இல்லாமல் லோகநாதன் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே, முத்துக்குமார் பைக்கில் வந்து கொண்டிருந்தார். அந்த சமயத்தில் இரு பைக்குகளும் நேருக்கு நேராக மோதிக் கொண்டன. இதில், லோகநாதனுக்கு சிராய்ப்பு காயம் ஏற்பட்டது. படுகாயமடைந்த முத்துக்குமார் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு இறந்தார்.
இதுகுறித்து, நங்கவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement