தண்டவாளத்தில் இரும்பு கம்பி ஏற்காடு எக்ஸ்பிரஸை கவிழ்க்க சதி?

இடைப்பாடி:சேலம் அருகே ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயில் சென்றபோது, ஒருவித சத்தம் எழுந்ததால், லோகோ பைலட், ரயிலை நிறுத்தினார். அங்கு இரும்பு கம்பி கிடந்ததால், ரயிலை கவிழ்க்க சதி நடந்ததா என்ற கோணத்தில், போலீசார் விசாரிக்கின்றனர்.

ஈரோட்டில் இருந்து சென்னை செல்லும் ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயில், சங்ககிரி, மகுடஞ்சாவடி, சேலம் வழியே சென்று வருகிறது.

இந்த ரயில் நேற்று இரவு, ஈரோட்டில் இருந்து சேலம் நோக்கி இரவு, 9:30 மணிக்கு புறப்பட்டது. சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி, அ.தாழையூரில் வந்தபோது, பெரிய சத்தம் எழுந்தது. லோகோ பைலட், உடனே ரயிலை நிறுத்தினார்.

ரயில்வே போலீசார், மகுடஞ்சாவடி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

விரைந்து வந்து ரயில்வே போலீசார் பார்த்தபோது, தண்டவாளத்தின் குறுக்கே, 10 அடி நீள இரும்பு கம்பி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

ரயில் வேகமாக சென்று கொண்டிருந்தபோது, குறுக்கே இருந்த கம்பி, இன்ஜின் மீது மோதியதால், பெரிய சத்தம் கேட்டது தெரியவந்தது.

இதையடுத்து சேதம் அடைந்த இன்ஜினின் முன்பகுதியை சரி செய்து, ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயில், இரவு 11:30 மணிக்கு புறப்பட்டது.

தொடர்ந்து தண்டவாளத்தின் குறுக்கே இரும்பு கம்பியை வைத்தது யார்? ரயிலை கவிழ்க்க சதி செய்தனரா என்பது குறித்து ரயில்வே போலீசார், மகுடஞ்சாவடி போலீசார் விசாரிக்கின்றனர்.

இச்சம்பவத்தால் பயணியர், இரண்டு மணி நேரம் வரை ரயிலில் காத்திருந்து சிரமத்துக்கு ஆளாகினர். அதேபோல், கேரளா எக்ஸ்பிரஸ், கன்னியாகுமரி - புனே, ஆலப்புழா - சென்னை உள்ளிட்ட ரயில்களும், இரண்டு மணி நேரம் வரை தாமதமானதால் பயணியர் கடும் அவதிக்குள்ளாகினர்.

Advertisement